மகளிர் உரிமை தொகை தெரியும்.. தமிழக அரசு தரும் இன்னொரு 1000 ரூபாய் திட்டம் தெரியுமா?

By Keerthana

Published:

வேலூர்: மகளிர் உரிமை தொகை தெரியும்.. அரசு தரும் இன்னொரு 1000 ரூபாய் பற்றி தெரியுமா? வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது யார் யாருக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை பார

தமிழக அரசின் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை 10ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டதாரிகள் வரை பெற முடியும். வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள் தான் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும்.

இந்த திட்டத்தின்படி, பத்தாம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ.200 வழங்கப்படுகிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.300 வழங்கப்படுகிறது. 12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ.400 வழங்கப்படுகிறது. பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.600-ம் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த பணம் மாதம் மாதம் உங்கள் வங்கி கணக்கில் வராது. இது உங்கள் வங்கி கணக்கில் காலாண்டிற்கு ஒருமுறை மொத்தமாகவே செலுத்தப்படும்.

இந்த திட்டத்தில் மற்றவர்களுக்கு 5 வருடம் எனில், மாற்றுத்திறனாளிகளை பொறுத்தமட்டில், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓராண்டு முடித்திருந்தால் போதுமானது ஆகும். அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் எழுதப்படிக்க தெரிந்த மற்றும் பத்தாம் வகுப்புதேர்ச்சி பெற்றவர்களுக்கு – ரூ.600/ வழங்கப்படும். பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு(HSC-Passed) – ரூ.750/ கிடைக்கும். பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு(DEGREE-Passed) – ரூ.1000 தருகிறது அரசு

இது தொடர்பாக வேலூர் மாவட்ட கலெக்டர் சுப்புலட்சுமி வெளியிட்ட அறிவிப்பில் :- “வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசினால் செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2019-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜூன் மாதம் 30-ந் தேதி வரையிலான காலாண்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவுசெய்து தற்போது 5 ஆண்டுகள் முடிவு பெற்றுள்ள இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பப்படிவங்களை வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். அல்லது www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் மாற்றுச்சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து அசல் கல்விச்சான்றுகள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டை, குடும்ப அட்டை (ரேஷன்கார்டு) மற்றும் வேலூர் மாவட்டத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் தொடங்கப்பட்ட சேமிப்பு கணக்கு புத்தகம் ஆகியவற்றை வேலை நாட்களில் நேரில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பித்து விண்ணப்பிக்கலாம்.

இதற்கு தகுதியானவர்கள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று வருபவர்கள் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் வருவாய்த்துறையின் ஒட்டுமொத்த சான்றுடன் உதவித்தொகைக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்ட தேதியிலிருந்து ஒராண்டு கழித்து, 2,3-ம் ஆண்டின் தொடக்கத்தில் பணியில் இல்லை என்ற சுய உறுதிமொழி படிவத்தை அவர்கள் அளிக்க வேண்டும்.

வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற்று வரும் இளைஞர்கள் தங்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அடையாள அட்டையை குறிப்பிட்டுள்ள காலத்தில் புதுப்பிக்க வேண்டும். புதுப்பித்தவுடன் அதனை வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். வேலை வாய்ப்பு அலுவலகப்பதிவை புதுப்பிக்க தவறியவர்களின் உதவித்தொகை உடனடியாக நிறுத்தப்படும். வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதால் பதிவு ஏதும் ரத்தாகாது” இவ்வாறு கூறியுள்ளார்.