மேற்கு ஆசியாவில் கடந்த பல மாதங்களாக தொடர்ந்து நீடித்து வந்த போரையும், அதன் விளைவாக ஏற்பட்ட கடுமையான பொருளாதார பாதிப்புகளையும் முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே எட்டப்பட்டுள்ள புதிய அமைதி ஒப்பந்த புரிந்துணர்வை இந்திய பிரதமர் நரேந்திர மோடி மனதார வரவேற்றுள்ளார். இந்த வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் மேற்கு ஆசிய பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் மீண்டும் நிலைநாட்ட பெரிதும் உதவும் என்று இந்தியா நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். வன்முறையினாலும் பொருளாதார தடைகளாலும் முடங்கி கிடந்த உலகளாவிய வர்த்தக பாதைகள் இந்த அமைதி பேச்சுவார்த்தையின் மூலம் மீண்டும் புத்துயிர் பெறும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து பிரதமர் மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்த தொடர் மோதல்களானது உலகெங்கிலும் கடுமையான பொருளாதார சீர்குலைவுகளை ஏற்படுத்தியதோடு மட்டுமன்றி, பல நாடுகளை சேர்ந்த ஏராளமான அப்பாவி மக்களின் உயிர்களையும் பலிவாங்கியுள்ளது என்று வேதனை தெரிவித்துள்ளார். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான இந்த புரிந்துணர்வை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் பிராந்தியத்தில் நிரந்தர அமைதி திரும்புவதோடு, சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கடல்சார் வர்த்தக பாதைகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். மேலும், இரு தரப்பிற்கும் இடையே இன்னும் தீர்க்கப்படாமல் இருக்கும் எஞ்சிய பிரச்சினைகள் குறித்தும் விரிவான விவாதங்கள் நடத்தப்பட்டு, ஒரு நிலையான மற்றும் விரிவான இறுதி ஒப்பந்தம் எட்டப்படுவதை இந்தியா ஆவலோடு எதிர்நோக்குகிறது என்றும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளிவந்துள்ள அறிவிப்புகளின்படி, இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான வரலாற்று சிறப்புமிக்க இறுதி அமைதி ஒப்பந்தமானது வரும் ஜூன் 19-ஆம் தேதி ஜெனிவாவில் வைத்து கையெழுத்தாக உள்ளது. இந்த இடைக்கால ஒப்பந்தத்தின் மிக முக்கிய அம்சமாக, உலகளாவிய எரிசக்தி விநியோகம் மற்றும் சர்வதேச வர்த்தகத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ‘ஹார்முஸ் ஜலசந்தி’ கடல் வழிப் பாதை மீண்டும் திறக்கப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளுக்கு இடையேயான பதற்றங்களை தணிக்கவும், முக்கிய சர்வதேச நீர்வழிகளில் தடையற்ற வணிகத்தை உறுதிப்படுத்தவும் எப்போதும் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர வழிகளையே இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் வெளியிட்டுள்ள இந்த அமைதி உடன்படிக்கையின் 14 முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தப் புள்ளிகளில் , போரை முற்றிலுமாக முடிவுக்கு கொண்டுவருவது, ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை நீக்குவது மற்றும் 30 நாட்களுக்குள் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது ஆகியவை முதன்மையாக சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், லெபனான் உள்ளிட்ட அனைத்து முன்னணி களங்களிலும் இராணுவ நடவடிக்கைகளை உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்துவதற்கு இந்த ஒப்பந்தம் அழைப்பு விடுக்கிறது என்று பாகிஸ்தான் பிரதமர் அறிவித்துள்ளார். இதனுடன், ஈரானின் உள்விவகாரங்களில் அமெரிக்கா தலையிடாது என்ற உறுதிமொழி, ஈரானை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெறுதல், எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் மீதான தடைகளை நிறுத்தி வைத்தல் மற்றும் முடக்கப்பட்டுள்ள 24 பில்லியன் டாலர் மதிப்பிலான ஈரானிய சொத்துக்களை விடுவிப்பது ஆகியவைகளும் இதில் அடங்கும்.
இந்த ஒப்பந்தத்தின் மற்றுமொரு முக்கியப் பகுதியாக, ஈரான் அணுஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் கீழ் தான் அணுஆயுதங்களை உருவாக்க மாட்டேன் என்ற தனது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில், ஈரானின் ஏவுகணைத் திட்டம் இந்த பேச்சுவார்த்தைகளில் இருந்து முற்றிலும் விலக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த இடைக்காலப் பேச்சுவார்த்தைகளின் போது இரு தரப்பும் புதிய தடைகளையோ அல்லது கூடுதல் படைகளையோ குவிக்கக் கூடாது என்றும், இறுதி ஒப்பந்தம் ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானத்தின் மூலம் ஆதரிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், போர் பாதித்த பகுதிகளின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளிடமிருந்து குறைந்தது 300 பில்லியன் டாலர் மதிப்பிலான நிதித் திட்டங்கள் மற்றும் இந்த ஒப்பந்தத்தை மேற்பார்வையிட ஒரு சிறப்புக் கண்காணிப்பு வழிமுறையும் உருவாக்கப்பட உள்ளது.
இருப்பினும், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இந்த அமைதி ஒப்பந்த நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில், இஸ்ரேல் நாடு தனது பிடிவாதமான போக்கைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. இது குறித்துப் பேசிய இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், லெபனான், சிரியா மற்றும் காசா ஆகிய பகுதிகளில் இஸ்ரேலியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலப்பகுதிகளில் இருந்து தங்களது படைகளைத் திரும்பப் பெறப் போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்துள்ளார். அமெரிக்கா-ஈரான் இடையேயான இடைக்கால ஒப்பந்தம் நிலுவையில் இருந்தாலும், தாங்கள் கைப்பற்றிய பகுதிகளில் இஸ்ரேல் “காலவரம்பின்றி” தொடர்ந்து நீடிக்கும் என்று அவர் கூறியுள்ளார். ஹெஸ்பொல்லா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களை நிறுத்துவதோடு இந்த அமைதி ஒப்பந்தத்தை ஈரான் முடிச்சுப் போட்டுள்ள நிலையில், இஸ்ரேலின் இந்த அதிரடிப் பின்வாங்கல் மறுப்புப் பேச்சுவார்த்தை பிராந்தியத்தில் புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
