அதே சட்டை தான்.. 30 வருசமா காணாம போய் அப்படியே திரும்பி வந்த நபர்.. ஊரையே நடுங்க வைத்த பின்னணி..

By Ajith V

Published:

பொதுவாக ஒரு நபர் திடீரென காணாமல் போனால் அவர்களை தேடி குடும்பத்தினரும், உறவினர்களும், நண்பர்களும் நிறைய இடங்களுக்கு சென்று தேடி வருவார்கள். அப்போதும் கிடைக்காத பட்சத்தில், உடனடியாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து காணாமல் போன நபரை இன்னும் துரிதமாக தேடுவதற்கான வழிகளையும் மேற்கொள்வார்கள்.

அதுவும் பலனளிக்காமல் போனால் நீண்ட நாட்களாக காணாமல் போன நபரை நினைத்து அவரது குடும்பத்தினர் வேதனையில் இருப்பதுடன் என்றாவது ஒரு நாள் திரும்பி வந்து விட மாட்டாரா என்ற ஏக்கத்துடனேயே நாட்களைக் கடப்பார்கள்.

அப்படி ஒரு சூழலில், ஒரு நபர் காணாமல் போய் சுமார் 30 ஆண்டுகள் கழித்து திரும்பி வர, அதன் பின்னால் ஒளிந்திருந்த மர்மங்கள் பலரையும் ஒரு நிமிடம் திடுக்கிட வைத்துள்ளது. ரோமானியா நாட்டைச் சேர்ந்தவர் தான் Vasile Gorgos. இவர் ஒரு விவசாயியாக இருந்து வந்ததாக தகவல் தெரிவிக்கும் நிலையில், அடிக்கடி தனது கால்நடைகளை விற்பதற்காக வேறு ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதே போன்று கடந்த 1991 ஆம் ஆண்டு வெளியூருக்கு சென்றிருந்த சமயத்தில் அவர் திரும்பி வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவரது குடும்பத்தினர் போலீசாரிடம் இது பற்றி புகாரளிக்க, நீண்ட நாட்களாக விசாரணை மேற்கொண்டும் எந்த பலனும் கிடைக்காமல் போய்விட்டது. ஆனால் சரியாக 30 ஆண்டுகளுக்கு பிறகு வாசிலே கோர்கோஸ் அவரது வீட்டின் பண்ணை அருகே வந்து நின்றிருந்தது அவரது குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது.

இதற்கிடையே இனிமேல் நிச்சயம் கோர்கோஸ் கிடைக்க மாட்டார் என அவரது குடும்பத்தினர் இறந்து விட்டதாக கருதி நினைவு நாளையும் கடைபிடித்து வந்தனர். 30 ஆண்டுகளுக்கு பிறகு அவர் வந்த சமயத்தில் வீட்டிற்கு அருகே ஒரு கார் வேகமாக சென்றதாகவும் அதில் எண் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றது.

இதில் மற்ற சில மர்மமான விஷயங்களாக அந்த 30 ஆண்டுகள் அவர் எங்கே இருந்தார் என்பதே அவருக்கு தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். அதே போல, 30 ஆண்டுகளுக்கு முன்பு அணிந்திருந்த அதே ஆடையில் மீண்டும் அவர் திரும்பி வந்ததும் அனைவரையும் பதற வைத்துள்ளது. மேலும் 1991 ஆம் ஆண்டு ட்ரெயின் டிக்கெட் ஒன்றும் அவரது பாக்கெட்டில் இருந்துள்ளது.

தற்போது அவருக்கு 95 வயதாகும் சூழலில், 30 ஆண்டுகள் கழித்து திரும்பி வந்தாலும் உடலில் வேறு எந்த பிரச்சனையும் இல்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அதே போல வாசிலே கோர்கோஸிற்கு தனது மகன் மற்றும் மகள் குறித்தே எந்த நினைவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

30 ஆண்டுகள் என்ன நடந்தது என்பதே தெரியாமல், எங்கே இருந்தார் என்றும் தெரியாமல் வாழ்க்கையின் பெரும் பங்கை யாரின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கியிருந்தார், என்ன வேலை செய்தார் என்பதே அறியாமல் இருக்கும் முதியவரின் 30 ஆண்டு கால வழக்கை என்றென்றைக்கும் மர்மம் தான்.