அமெரிக்க உள்துறை மற்றும் குடிவரவு முகமைகளை எதிர்த்து, இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் முக்கியமான வழக்கொன்றை தொடர்ந்துள்ளனர். அமெரிக்க சிவில் பாதுகாப்பு சங்கம் (ACLU) ஆதரவுடன் நியூ ஹாம்ஷையர் மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு, F-1 மாணவர் விசா நிலையை சட்டத்திற்குப் புறம்பாக மற்றும் முன் எச்சரிக்கையின்றி ரத்து செய்ததாக குற்றம்சாட்டுகிறது.
இந்திய, சீன மாணவர்கள் தற்போது சட்டப்பூர்வமான குடிவரவு நிலையை இழந்து, கல்லூரியில் இருந்து நீக்கப்பட்டு, நாடு கடத்தப்படும் அபாயத்தில் உள்ளதாக தங்கள் மனுவில் கூறியுள்ளனர். திடீரென விசா ரத்து செய்யப்பட்டதால், அவர்கள் நிதி மற்றும் கல்வி ரீதியாக கடும் பாதிப்பை சந்திப்பதாகவும், பலர் தங்களது பட்டங்களை முடிக்க முடியாமல் தவிக்க, Optional Practical Training (OPT) போன்ற வேலை வாய்ப்பு திட்டங்களிலும் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்திய மாணவரான லிங்கித் பாபு கொரெல்லா, மே 20 அன்று தனது மாஸ்டர்ஸ் பட்டத்தை பெறவிருந்தார். ஆனால் தற்போது விசா செல்லாததாக இருப்பதால், அவர் பட்டத்தை பெற முடியாமல் போனார். மேலும், தனுஜ் குமார் கும்மடவெல்லி மற்றும் மணிகண்ட பசுலா என்ற இரண்டு இந்திய மாணவர்கள், இன்னும் ஒரு செமஸ்டர் மட்டுமே உள்ள நிலையில், கல்வியை தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல் சீன மாணவரான ஹாங்க்ருய் ஜாங், விசா ரத்து காரணமாக தனது ஆராய்ச்சி உதவியாளர் பதவியை, அதாவது தனது ஒரே வருமானத்தை இழந்துள்ளார். மற்றொரு சீன மாணவர் ஹாயாங் ஆன், ஏற்கனவே $3.29 லட்சம் செலவழித்த பிறகும், தனது மாஸ்டர்ஸ் பாடத்திட்டத்தை கைவிட வேண்டிய நிலையில் உள்ளார்.
இந்த வழக்கில் கூறப்பட்டபடி, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கே விசா ரத்து செய்யும் முன் எந்தவிதமான அறிவிப்பும் வழங்கப்படவில்லை என ACLU நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. இந்த நடவடிக்கை மாணவர்களின் உரிமைகளை மீறியதாக உள்ளது என்றும், மாணவர்கள் சட்டப்படி விசா நிபந்தனைகளை பின்பற்றியிருந்தாலும், அவர்களின் விசா காலக்கெடு என்பது கேள்விக்குள்ளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முடிவில், இந்த வழக்கு அமெரிக்காவில் கல்வி பயிலும் ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களுக்கு முக்கியமான சட்ட முன்னுதாரணமாக இருக்கக்கூடும். மாணவர்கள் விசா நிபந்தனைகளை பின்பற்றியும், திடீரென எதிர்கொள்ளும் இழப்புகள் அவர்களின் வாழ்வையே குழப்பத்தில் ஆழ்த்தும்.
இந்த வழக்கில் இந்திய, சீன மாணவர்களுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் டிரம்ப் அரசு ஆட்டம் காணும் என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.