கடந்த சில வாரங்களுக்கு முன்னர், அதிமுக–பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டாலும், இந்த கூட்டணி திமுக கூட்டணியை தோற்கடிக்கும் அளவுக்கு பலம் இல்லை என்பது இரு கட்சிகளுக்குமே தெரியும். எனவேதான் கூடுதலாக இந்த கூட்டணியில் சில கட்சிகளை சேர்க்க திட்டமிடப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க அதிமுகவுக்கு விருப்பமில்லை என்றும், அந்த கட்சிக்கு வாக்கு சதவீதம் மிகவும் குறைவாக இருப்பதால், அக்கட்சி தேவையில்லை என்றும் எடப்பாடி பழனிச்சாமி நினைப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல் பாமகவை கூட்டணியில் சேர்த்தாலும், அவர்களுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகளை அவர்கள் கேட்டு பெற்றுவிடுவார்கள். ஆனால் மற்ற தொகுதிகளில் அந்த கட்சிக்கு வாக்கு சதவீதம் இல்லை என்பதால், அந்த கட்சியை கூட்டணியில் சேர்ப்பதால் எந்த விதமான பலனும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
இதனால்தான் தமிழ்நாடு முழுவதும் ஒரு குறிப்பிட்ட வாக்கு சதவீதம் கொண்டுள்ள விஜய் மற்றும் சீமான் ஆகிய இருவரையும் கூட்டணியில் சேர்க்க தீவிர முயற்சி செய்யப்பட்டு வருவதாகவும், குறைந்தபட்சம் இவர்களில் யாராவது ஒருவரை சேர்த்தால் கூட கூட்டணி பலமாகிவிடும் என்றும் கூறப்படுகிறது.
விஜய்க்கு துணை முதல்வர் அல்லது வலுவான அமைச்சர் பதவி கொடுப்போம் என்று சொல்லி கூட்டணிக்கு இழுக்கும் வாய்ப்பு இருப்பதாகவும், அதேபோல் சீமானுக்கும் சில வாக்குறுதிகள் கொடுத்து கூட்டணியில் சேர்க்கும் முயற்சி நடந்து வருகிறது.
விஜய் அல்லது சீமான், அல்லது இருவருமே அதிமுக–பாஜக கூட்டணியில் சேர்ந்துவிட்டால், இந்த கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்பது சந்தேகம் இல்லை. எனினும், வெற்றி பெற்ற பிறகு யார் முதல்வர்? யார் யாரெல்லாம் அமைச்சர்கள்? என்பது போன்ற சில சிக்கல்கள் ஏற்படலாம். ஆனால் அதனை பாஜக மேலிடம் சரி செய்து விடும் என்றும் கூறப்படுகிறது.
ஆனாலும், இன்னும் தேர்தலுக்கு ஒரு வருடம் இருப்பதால், இவையெல்லாம் யூகங்கள் மட்டுமே. அது எவ்வாறு நிஜமாகும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.