ரூ.5577 கோடி மதிப்பிலான கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு.. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

By Keerthana

Published:

சென்னை: தமிழ்நாட்டில் முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 2021-ம் ஆண்டு மே 7-ம் தேதியில் இருந்து கடந்த ஜனவரி 31-ம் தேதி வரை கடந்த 3 ஆண்டுகளில் ரூ.5577 கோடி மதிப்பிலான கோவில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு உள்ளது. அத்துடன் 1,355 கோவில்களில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது:

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டில் முதல்வர் மு க ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 2021-ம் ஆண்டு மே 7-ம் தேதியில் இருந்து கடந்த ஜனவரி 31-ம் தேதி வரை கடந்த 3 ஆண்டுகளில் 1,355 கோவில்களில் திருப்பணிகளை தொடர்ந்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. 8 ஆயிரத்து 436 கோவில்களில் 18 ஆயிரத்து 841 திருப்பணிகள் ரூ.3 ஆயிரத்து 776 கோடி மதிப்பில் நடக்க அனுமதி வழங்கப்பட்டு 5 ஆயிரத்து 775 கோவில்களில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு இருக்கிறது.

சமயபுரம், திருவெண்ணெய்நல்லூர், திருப்பாற்கடல், தாராபுரம், அரியலூர், சென்னை கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் 6 கோவில்களில் ரூ,8 கோடி மதிப்பில் புதிய ராஜகோபுரங்கள் கட்டப்பட்டு கும்பாபிஷேகமும் நடத்தப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து, 6 கோவில்களில் ரூ,28.78 கோடியில் புதிய ராஜகோபுரங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. தொடர்ந்து மேலும் 15 கோவில்களில் ராஜகோபுரங்கள் ரூ,25.98 கோடி மதிப்பில் கட்டப்படும். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா வரகுணநாத சாமி கோவில், 3 நிலை ராஜகோபுரம் பக்தர்களின் நிதியுதவியாக ரூ,50 லட்சம் பெறப்பட்டு கட்டப்படுகிறது. 756 கோவில்களில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தினசரி 82 ஆயிரம் பேர் பயனடைந்து வருகின்றனர். நடப்பாண்டு 7 கோவில்களில் அன்னதானத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது .

கடந்த மூன்றாண்டுகளில் அறநிலையங்களுக்குச் சொந்தமான நிலம், கட்டிடம், மனை ஆகியவற்றில் ஏற்பட்ட ஆக்கிரமிப்பிலிருந்து ரூ,5 ஆயிரத்து 577.35 கோடி மதிப்பிலான 6 ஆயிரத்து 140.59 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டிருக்கிறது.

ஆறு கோவில்களுக்கு சொந்தமான பல மாற்று பொன் இனங்கள் உருக்கப்பட்டு, 344.334 கிலோ கிராம் தங்கக்கட்டிகளாக மாற்றி, ரூ,191.65 கோடி மதிப்பில் வங்கியில் முதலீடு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஆண்டு ஒன்றுக்கு வட்டி வருவாய் ரூ.4.31 கோடி வருகிறது. 11 கோவில்களுக்கு சொந்தமான பல மாற்று பொன் இனங்கள் பிரித்தெடுக்கப்பட்டு தங்க கட்டிகளாக மாற்றப்பட்டு வருகிறது.

ஒரு கால பூஜை திட்டத்தில் கோவில் ஒன்றுக்கு தலா ரூ,2 லட்சம் வீதம் 2 ஆயிரம் கோவில்களுக்கு அரசு மானியம் ரூ,40 கோடி வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் தற்போது 17 ஆயிரம் கோவில்கள் பயனடைந்துள்ளன.

ஒரு கோவிலுக்கு ஒரு அர்ச்சகர் வீதம் பதிவு செய்து மாதம் ரூ,1,000 வீதம் வழங்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் வரை 15 ஆயிரத்து 753 பேர் பயனடைந்திருக்கிறார்கள். பழனி கோவிலில் ரூ,80 கோடியே 50 லட்சம் மதிப்பில் பழனி மற்றும் இடும்பன் மலை இடையே கம்பிவட ஊர்தி, அனுவாவி, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் ஆகிய கோவில்களில் கம்பிவட ஊர்திகள் அமைக்க சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு, மதிப்பீடு தயார் செய்யப்பட்டு வருகிறது. வள்ளலாரின் 200-வது ஆண்டு பிறந்த நாள், தர்மசாலை தொடங்கி 156-வது ஆண்டு ஜோதி தரிசனத்தின் 152-வது ஆண்டு ஆகிய முப்பெரும் விழா 52 வாரங்கள் கொண்டாடப்பட்டிருக்கிறது. பல்வேறு பணிகளால் இந்து சமய அறநிலையத்துறை பணிகளையும், முதல்-அமைச்சரையும் அனைவரும் மனமுவந்து பாராட்டி வருகின்றனர் ” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.