ஆருத்ரா நாளில் ஆதியோகி முன்பு நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சி! கேரளா, தமிழ்நாட்டை சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்பு!!

கோவை ஈஷா யோக மையத்தில் உள்ள ஆதியோகி வளாகத்தில், மார்கழி மாதத்தின் மிக முக்கிய ஆன்மீக நிகழ்வான ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, தெய்வதாசகம் கூட்டமைப்பு சார்பில் “ஈஷா சிவமயம் – சிவப்பிரசாத பஞ்சகம்” என்ற…

isha

கோவை ஈஷா யோக மையத்தில் உள்ள ஆதியோகி வளாகத்தில், மார்கழி மாதத்தின் மிக முக்கிய ஆன்மீக நிகழ்வான ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு, தெய்வதாசகம் கூட்டமைப்பு சார்பில் “ஈஷா சிவமயம் – சிவப்பிரசாத பஞ்சகம்” என்ற பிரம்மாண்ட பரதநாட்டிய நிகழ்ச்சி இன்று (03/01/2026) நடைபெற்றது.

தமிழகம் மற்றும் கேரளாவில் ‘திருவாதிரை’ அல்லது ‘ஆருத்ரா’ திருநாள் சிவபெருமானுக்கு உகந்த நாளாகவும் நடராஜப் பெருமான் ஆடிய ‘ஆனந்த தாண்டவத்தை’ நினைவுகூரும் விதமாகவும் ‘ஆருத்ரா தரிசனம்’ என சிவாலயங்களில் கொண்டாடப்படுகிறது.

இவ்விழாவை முன்னிட்டு ஈஷாவில் ஆதியோகி திருவுருவத்தின் முன்பு 250-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் ஒன்றிணைந்து ஸ்ரீ நாராயண குரு அவர்கள் இயற்றிய சிவப்பிரசாத பஞ்சக என்ற பக்தி பாடல்களுக்கு நடனம் ஆடினர்.

“சிவப்பிரசாத பஞ்சகம்” என்பது சிவபெருமானின் பேரருளைப் போற்றித் துதிக்கும் ஐந்து ஸ்லோகங்கள் கொண்ட ஆன்மீகத் தொகுப்பாகும். ஜாதி, மத வேறுபாடுகளைக் கடந்து ‘இறைவன் ஒருவனே’ என்ற உயரிய நோக்கில் நாராயணா குருவால் இப்பாடல்கள் இயற்றப்பட்டுள்ளன. எளிமையான நடையில் ஆழமான தத்துவங்களை விளக்கும் இப்பாடல்கள், கேரள மற்றும் தமிழகத்தில் உள்ள நாராயண குருவின் சீடர்களால் இன்றும் சிவபெருமானின் அருளைப் பெறுவதற்கான ஒரு முக்கிய வழிபாட்டுப் பாடலாகப் போற்றப்படுகிறது.

எஸ்.என்.டி.பி யோகம் திரூர் யூனியன் தலைவர் கே.ஆர். பாலன் இந்த நிகழ்வைத் தொடங்கி வைத்தார். தெய்வதாசகம் கூட்டமைப்பின் தலைவர் கிரீஷ் உண்ணிகிருஷ்ணன் மற்றும் ‘என்டே குரு’ அமைப்பின் தலைவர் ரம்யா அனூப் ஆகியோர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தனர். கோழிக்கோட்டைச் சேர்ந்த நடனக் கலைஞர் மஞ்சு வி. நாயர் இந்த நடனத்தை வடிவமைக்க, பிஜீஷ் கிருஷ்ணா இதற்கு இசையமைத்தார்.

இந்த பரதநாட்டிய நிகழ்ச்சியை ஈஷா யோகா மையத்தின் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர்.  250-க்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஆடிய நடனம், அங்கு கூடியிருந்த பக்தர்களையும் பார்வையாளர்களையும் மெய்சிலிர்க்க வைத்தது.