Senthil Balaji case| டெல்லியிலும் சரி, சென்னையிலும் சரி.. செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ம் தேதி முக்கியமான நாள்

By Keerthana

Published:

சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய மனுவின் தீர்ப்பினை தள்ளி வைக்கக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது ஜூலை 12ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவித்துள்ளது.இதேபோல் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவும் ஜூலை 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். கடந்த ஓராண்டுக்குமேலா புழல் சிறையில் உள்ள செந்தில்பாலாஜி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன்பின்னர் சென்னை ஐகோர்டும் தொடர்ச்சியாக தள்ளுபடி செய்திருந்தது.

இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, அமலாக்கத்துறை தரப்பில் இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைத்தது. அதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் ஜாமீன் மனு மீதான விசாரணையை நாளை மறு தினத்திற்கு (ஜூலை 12) ஒத்திவைத்தள்ளது.

இது ஒரு புறம் எனில், சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தள்ளிவைக்க கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

அதில், போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்டு, சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.அந்த விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை வழக்கின் விசாரணையை தள்ளிவைக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு தள்ளுபடி செய்த உத்தரவை எதிர்த்த மேல்முறையீடு வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. எனவே இந்த தீர்ப்பினை தள்ளி வைக்க வேண்டும் என கோரப்பட்டிருக்கிறது.

இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் வாதங்களை துவங்காததால், விசாரணையை தள்ளிவைக்க கோரிய மனு மீது ஜூலை 12ம் தேதி உத்தரவு பிறப்பிப்பதாக நீதிபதி அல்லி அறிவித்துள்ளார்.