நாளை (30.04.2025) பொழுது விடிந்தால் அக்ஷய திருதியை. இந்த நாள் எத்தகைய சிறப்பு வாய்ந்ததுன்னு பாருங்க…
குசேலன் தன் பால்ய நண்பன் கண்ணனுக்கு சிறிது அவல் கொடுத்து தன் வறுமையைப் போக்கிய நாள்.. பாண்டவர்கள் வனவாசத்தின் போது சூரியனிடமிருந்து அட்சய பாத்திரம் பெற்ற நாளும் இதுதான். மணிமேகலையும் அட்சய பாத்திரம் பெற்ற நாள். கௌரவர் சபையில் பாஞ்சாலி ஆடையை துச்சாதனன் உருவும்போது, “அட்சய’ என கண்ணன் கூற, பாஞ்சாலியின் புடவை வளர்ந்து அவள் மானம் காத்த நாள் இதுதான்.
பரசுராமர் அவதரித்த நாளும் இதுதான். மகாலட்சுமி திருமால் மார்பில் நீங்கா இடம்பிடித்த நாள். ஆதிசங்கரர் கனக தாரா ஸ்தோத்திரம் பாடி தங்க நெல்லிக்கனி மழை பெய்வித்த உன்னதத் திருநாளும் இதுவே. இவ்வளவு சிறப்பு வாயந்த இந்த ” அக்ஷய் திரிதியை” நன்னாளில் இருக்கும் நகையை அடகு வைத்து விட்டு, நிரம்பி வழியும் நகைக்கடைகளில் அலைமோதிக் கொண்டு உள்ளே சென்று ஒரு குண்டுமணி தங்கமாவது வாங்க வேண்டும் என்று எந்த சாஸ்திரமும் சொல்லவில்லை.
சென்ற சில பத்தாண்டுகளில் வணிக நோக்கத்தில் கிளப்பி விடப்பட்ட மாயை இது என்றும் சொல்கின்றனர். இது ஒரு வகையில் உண்மையும் கூட. அதனால்தான் தங்கத்தின் விலை ஒரே நாளில் உச்சத்தைத் தொடுகிறது. ஒரே நாளில் சந்தைக் கடைபோல முண்டியடித்துக் கொண்டு வாங்கி தங்கத்தின் விலையை ஏற்றாதீர்கள். எதுவானாலும் தேவை என்றால் மட்டுமே வாங்குவதை வழக்கமாகக் கொள்ளுங்கள். இது உங்களுக்கும் நல்லது, நாட்டுக்கும் நல்லது. அக்ஷய திருதியை தினத்தன்று லட்சுமி குடியிருக்கும் பொருட்களை வாங்க வேண்டும் என்பதே ஐதீகம்.
அந்த வகையில் பார்த்தால் அன்று குறிப்பாக வாங்க வேண்டிய பொருட்கள் மஞ்சளும், முனை முறியாத (கைக்குத்தல்) பச்சரிசி, கல்லுப்பு ஆகியவைதான். இந்த நாளில் எடுத்த காரியம் எதனிலும் வெற்றியே என்பது இந்துக்களின் நம்பிக்கை. இந்த நாளில் ஹோமம், ஜபம் முதலியவை செய்வதால் நம்முடைய செல்வமும் பலமடங்காகப் பெருகி வளம் செழிக்கும் என்பது நம்மிடையே இருந்து வரும் நம்பிக்கை