கடந்த 2003 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கைப் செயலியின் மூலம் பல்வேறு வசதிகள் பெற முடிந்தது. குறிப்பாக, அலுவலகங்களில் உள்ள அலுவலர்கள் கான்பரன்ஸ் கால், வாய்ஸ் கால் போன்றவற்றை மேற்கொள்ளலாம். மேலும், இன்ஸ்டன்ட் மெசேஜிங், கோப்புகளை அனுப்புதல் உள்ளிட்ட பல வசதிகள் கொண்ட இந்த செயலியை மொபைல் போனில் மட்டுமின்றி, கம்ப்யூட்டரில் பயன்படுத்தவும் முடியும்.
2003 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஸ்கைப், 2011 ஆம் ஆண்டில் அதன் வளர்ச்சியை கண்டு ஆச்சரியமடைந்த மைக்ரோசாப்ட், சுமார் 8.5 பில்லியன் டாலர் மதிப்பில் இதனை வாங்கியது. ஆனால், வாட்ஸ்அப், ஜூம், பேஸ் டைம் போன்றவற்றில் வீடியோ கால் வசதி அறிமுகமானதை தொடர்ந்து, ஸ்கைப் பயன்பாடு குறைந்தது. கொரோனா வைரஸ் காலத்திலும், ஸ்கைப் கடுமையான போட்டியை சந்தித்தது.
இந்த நிலையில், 2023 ஆம் ஆண்டிலிருந்து ஸ்கைப் வருமானம் மிகவும் சரிவடைந்தது. இதன் காரணமாக, வரும் மே 5ஆம் தேதி ஸ்கைப் சேவை நிறுத்தப்படும் என்று மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. அதற்கு மாற்றாக, மைக்ரோசாப்ட் டீம்ஸ் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.