தமிழக அரசியல் வரலாற்றில் கட்சிகளை இணைப்பதும், கூட்டணிகளை மாற்றி அமைப்பதும் புதிய விஷயமல்ல என்றாலும், சமீபகாலமாக எடுக்கப்பட்ட சில முடிவுகள் சில தலைவர்களின் அரசியல் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளன. அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராக இருந்த நடிகர் சரத்குமார், தனது கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்த முடிவு, தற்பொழுது அவருடைய தீவிர ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நள்ளிரவு நேரத்தில் சரத்குமார் வீட்டிற்கு வந்து, கட்சியை இணைக்குமாறு அண்ணாமலை கொடுத்த அழுத்தமே இந்த அவசர முடிவுக்குக் காரணம் என்று தற்பொழுது அவரது ஆதரவாளர்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர். அண்ணாமலையின் வார்த்தைகளை நம்பி, இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டு வளர்த்த கட்சியை பாஜாகவிடம் ஒப்படைத்துவிட்டு, இப்பொழுது எந்தப் பலனும் இல்லாமல் சரத்குமார் தவித்து வருவதாக அடிமட்டத் தொண்டர்கள் ஆதங்கப்படுகின்றனர்.
பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தால் தேசிய அளவில் பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்றும், தமிழக அரசியலில் ஒரு முக்கிய சக்தியாக மாறலாம் என்றும் சரத்குமாருக்கு பல வாக்குறுதிகள் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக, அண்ணாமலையின் அரசியல் அணுகுமுறையும், அவரது ஆக்ரோஷமான பேச்சுகளும் சரத்குமாரை கவர்ந்ததால், அவர் இந்த வரலாற்று பிழையான முடிவை எடுத்தார் என்று அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
ஆனால், கட்சியை இணைத்த முதல் நாளில் இருந்தே பாஜாகவில் சரத்குமாருக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது. அண்ணாமலையை மட்டுமே முன்னிறுத்தி நடத்தப்படும் அரசியலில், சரத்குமார் போன்ற மூத்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டு, வெறும் தேர்தல் பிரச்சார பீரங்கிகளாக மட்டுமே பயன்படுத்தப்பட்டனர் என்பது தொண்டர்களின் வாதமாக உள்ளது.
இந்த அதிருப்தி உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில் தான், அண்ணாமலை திடீரென பாஜகவின் அதிகாரப்பூர்வ பொறுப்புகளில் இருந்து விலகி தனிப்பாதையில் தனது சொந்த இயக்கத்தை நோக்கி செல்ல தொடங்கிவிட்டார். தன்னை நம்பி வந்த தலைவர்களை பற்றி கவலைப்படாமல், அண்ணாமலை தனது சொந்த அரசியல் நகர்வுகளை மட்டுமே கவனித்து கொண்டு தனி இயக்கம் என்ற பாதையை தேர்ந்தெடுத்தது, சரத்குமார் தரப்புக்கு இடி போல் இறங்கியுள்ளது. அண்ணாமலையை முழுமையாக நம்பி, சொந்த கட்சியின் அடையாளத்தையே தொலைத்துவிட்டு நின்ற சரத்குமாருக்கு, இந்த திடீர் மாற்றம் மிகப்பெரிய துரோகமாகவே பார்க்கப்படுகிறது. தலைவரை நம்பி பாஜகவிற்கு பின்னால் அணிவகுத்த சமத்துவ மக்கள் கட்சியின் முன்னாள் தொண்டர்கள், இப்பொழுது தங்களை வழிநடத்த ஆள் இல்லாமல் நட்டாற்றில் நிற்கிறோம் என்று வேதனைப்படுகின்றனர்.
சரத்குமார் பாஜகவில் சேர்ந்த நாள் முதல் இன்று வரை அவருக்கும் சரி, அவரது குடும்பத்தினருக்கும் சரி எந்தவொரு அரசியல் ஆதாயமும் அல்லது அதிகாரப் பதவியும் கிடைக்கவில்லை என்பதுதான் கசப்பான எதார்த்தம். சினிமா மற்றும் அரசியல் என இரண்டிலும் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்த சரத்குமார், பாஜகவிற்கு சென்ற பிறகு தனது சுயமான அரசியல் செல்வாக்கை இழந்துவிட்டார் என்றே விமர்சகர்கள் கருதுகின்றனர். கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு கூட டெல்லி மேலிடத்திலோ அல்லது மாநில அளவிலோ எந்தவொரு பொறுப்பும் பெற்றுத்தர அண்ணாமலை தவறிவிட்டார். அண்ணாமலையின் வெற்று பேச்சுகளை நம்பி ஏமாந்ததால், சரத்குமாரின் இத்தனை ஆண்டுகால அரசியல் உழைப்பு மொத்தமாக வீணாகிவிட்டதாக அவரது குடும்பத்தினரும் நெருங்கிய வட்டாரங்களும் வருத்தப்படுகின்றனர்.
அரசியல் உத்திகளை சரியாக கணித்திருந்தால், சரத்குமார் தனது சமத்துவ மக்கள் கட்சியை 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை எவ்வித சமரசமும் இன்றி தனித்து நடத்தியிருக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் ஒரு மாற்று பாதையை சுட்டிக்காட்டுகின்றனர். அதன்பின்னர் தேர்தலின்போது தமிழக வெற்றி கழகத்துடன் டன் சரத்குமார் கூட்டணி அமைத்திருந்தால், அது ஒட்டுமொத்த தேர்தல் முடிவுகளையுமே மாற்றியிருக்கும். விஜய்யின் மக்கள் செல்வாக்கும், சரத்குமாரின் நீண்டகால அரசியல் அனுபவமும் இணைந்திருந்தால், அது ஒரு வெற்றிகரமான கூட்டணியாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. அப்படி ஒரு வியூகத்தை வகுத்திருந்தால், 2026 தேர்தலுக்குப் பிறகு புதிய ஆட்சியில் சரத்குமாரும் அவரது மனைவி ராதிகாவும் அமைச்சர்களாக பொறுப்பேற்று தமிழக அதிகார மையத்தில் அமர்ந்திருக்க முடியும் என்று தொண்டர்கள் புலம்புகின்றனர்.
ஆனால், இந்தச் பொன்னான வாய்ப்புகளையெல்லாம் நழுவவிட்டு, அண்ணாமலையின் பேச்சைக் கேட்டு அவசரப்பட்டு எடுத்த முடிவால் சரத்குமார் இன்று அரசியல் ரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்டு நிற்கிறார். திமுக, அதிமுக போன்ற பெரிய கட்சிகளுக்கு மாற்றாக விஜய் உருவெடுத்து வரும் வேளையில், தவெகவுடன் கைகோர்க்க வேண்டிய சரத்குமார், இன்று எந்தப் பிடிப்பும் இல்லாமல் தவிப்பது அவரது ஆதரவாளர்களைப் பெரும் புலம்பலில் ஆழ்த்தியுள்ளது. அண்ணாமலையை நம்பிப் போய் ஏமாந்த கதையை நினைத்து, இழந்த கட்சியின் அடையாளத்தை எப்படி மீட்பது என்று தெரியாமல் சமத்துவ மக்கள் கட்சியின் முன்னாள் தொண்டர்கள் திகைத்துப் போய் நிற்கின்றனர். இறுதியில், அண்ணாமலையின் சுயநல அரசியலுக்கு இரையாகி, தன் வாழ்நாள் அரசியல் கனவுகளையும், அமைச்சர் பதவிகளையும் சரத்குமார் கோட்டை விட்டுவிட்டார் என்ற ஆதங்கக் குரல் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பலமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
