சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிக்கப்படும் போது எல்லாம் ரொக்கப்பணம் வழங்கப்படுவது வழக்கமாக உள்ளது. கடந்த ஆண்டு 1000 ரூபாய் ரொக்கப்பணம் பொங்கல் பண்டிகையின் போது வழங்கப்பட்டது. ஆனால் இந்த முறை கிடைக்குமா என்பது தெரியவில்லை.. எனினும் ரொக்க பரிசு தவிர அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கிட அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசுவெளியிட்டுள்ள அறிவிப்பில், “2025-ஆம் ஆண்டில் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடிட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக் கரும்பு வழங்கிட தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழர்களின் பழம்பெரும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பிரதிபலிக்கும் விழாவாகப் பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்நாள் அறுவடைத் திருவிழாவாகவும், இயற்கைக்கும், உழவர் பெருங்குடி மக்களுக்கும் அவர்தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும், நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விழாவாகவும் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
2025-ஆம் ஆண்டு தைப்பொங்கலைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்பு வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்களும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர்களும் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ரூபாய் 249.76 கோடி செலவு ஏற்படும். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்படவுள்ள இலவச வேட்டி மாவட்டங்களுக்கும் சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” இவ்வாறு அரைசின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.