டிரைவர் இல்லாத காரில் பயணம்.. சைக்கிள் ரைடு.. சிகாகோவில் மாஸ் காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்

By John A

Published:

அமெரிக்க நாட்டிற்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தமிழ்நாட்டில் தொழில் வளங்களைப் பெருக்கும் நோக்கிலும், வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்தும் பொருட்டும் அங்குள்ள முன்னணி நிறுவனங்களுடன் கலந்துரையாடி முதலீடுகளை ஈர்த்து வருகிறார். இதுவரை சுமார் 1800 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளையும் உருவாக்கிட வழி வகுத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

ஒருபுறம் தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் மீட்டிங், முதலீடுகளை ஈர்க்கும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து என அமெரிக்காவில் பம்பரமாகச் சுழன்று கொண்டிருக்கும் ஸ்டாலின் மறுபுறம் தனது ஓய்வு நேரங்களில் மைக்ரோ சாப்ட், கூகுள் போன்ற நிறுவனங்களுக்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளிடம் கலந்துரையாடினார்.

முதல்வர் பயணம் செய்த டிரைவர் இல்லாத காரில் இத்தனை சிறப்பு அம்சங்களா? ஆச்சரிய தகவல்..!

மேலும் அவர் டிரைவரே இல்லாத காரில் பயணித்த வீடியோ வைரலாகியது. ஜாகுவா நிறுவனத்தின் I-Pace எஸ்யூவி கூபே என்ற தானியங்கி எலக்ட்ரிக் காரில் பயணம் செய்தார். ரேடார் திறன் கொண்ட இந்தக் கார் போக்குவரத்து நெரிசல், சிக்னல், பாதைகள் ஆகியவற்றைத் துல்லியமாகக் கணிக்கும் திறன் கொண்டது. காரைச்சுற்றிலும் அதி நவீன 30 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் குளிர் காலங்களிலும் பாதையை துல்லியமாகக் கணித்து ஓடக் கூடிய திறன் கொண்ட இந்தக் காரில் முதல்வர் பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து சிகாகோ நகருக்குச் சென்ற அவர் அங்குள்ள தமிழ்வாழ் சொந்தங்களிடம் கலந்துரையாடினார். பொதுவாகவே உடலை பேணிக்காப்பதில் ஆர்வமுடைய முதல்வர் ஸ்டாலின் தினசரி யோகா, வாக்கிங், உடற்பயிற்சி செய்வதை வழக்கமாகக் கொண்டிருப்பார். இந்நிலையில் சிகாகோவில் மாலைப் பொழுதில் பாடலை முணுமுணுத்தவாறே ஜாலியாக சைக்கிள் ரைடிங் சென்றிருக்கிறார். தற்போது இந்த வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு மாலை நேரத்தின் அமைதி புதிய கனவுகளுக்கு வழிவகுக்கிறது என்று தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து செப்டம்பர் 12 வரை அங்கேயே தங்கி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதல்வர் ஸ்டாலின் அன்று மாலை தமிழகம் திரும்புகிறார்.