தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய புதிய அத்தியாயமாக, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவையின் முதலாவது பெரிய விரிவாக்கம் இன்று சென்னை கவர்னர் மாளிகையில் மிகக் கோலாகலமாக நடைபெற்றது. கடந்த மே 10-ஆம் தேதி முதலமைச்சருடன் 9 அமைச்சர்கள் மட்டுமே பதவியேற்றிருந்த நிலையில், இன்று மேலும் 23 புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாகப் பதவியேற்று கொண்டனர். தமிழக ஆளுநர் இராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் புதிய அமைச்சர்களுக்கு பதவியேற்பு பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். இந்த அதிரடி விரிவாக்கத்தின் மூலம் தமிழக அமைச்சரவையின் ஒட்டுமொத்த எண்ணிக்கை தற்போது 33 ஆக உயர்ந்துள்ளது.
இன்று நடைபெற்ற இந்த வரலாற்று சிறப்புமிக்க அமைச்சரவை விரிவாக்கத்தில், ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த 21 சட்டமன்ற உறுப்பினர்களும், அதன் கூட்டணி கட்சியான அகில இந்திய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 2 சட்டமன்ற உறுப்பினர்களும் புதிய அமைச்சர்களாக பொறுப்பேற்றுள்ளனர். திராவிட பாரம்பரிய கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வழங்கப்படாத நிலையை உடைத்து, தமிழ்நாட்டில் ஒரு புதிய கூட்டாட்சி கலாச்சாரத்தை முதலமைச்சர் விஜய் முறைப்படி தொடங்கி வைத்துள்ளார். தவெக தரப்பில் ஸ்ரீநாத், எஸ். கமலி, சி. விஜயலட்சுமி, ஆர்.வி. ரஞ்சித்குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் இன்று அமைச்சர்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்த அமைச்சரவை விரிவாக்கத்தின் மிக முக்கிய அரசியல் திருப்புமுனையாக, கடந்த 59 ஆண்டுகால நீண்ட இடைவெளிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுத்துள்ளது. கடைசியாக 1967-ஆம் ஆண்டு பக்தவத்சலம் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு, சுமார் ஆறு தசாப்தங்களாக அக்கட்சி தமிழகத்தில் ஆட்சிக் கட்டிலில் அமரவில்லை. இன்று கிள்ளியூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ எஸ். ராஜேஷ்குமார் மற்றும் மேலூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பி. விஸ்வநாதன் ஆகிய இருவரும் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டதன் மூலம், காங்கிரஸ் தொண்டர்களின் நீண்டகால அதிகார கனவு நனவாகியுள்ளது.
இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ஒரு சுவாரசியமான மற்றும் பரபரப்பான நிகழ்வும் அரங்கேறியது. காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ். ராஜேஷ்குமார் அவர்கள் அமைச்சராக பதவியேற்கும்போது, தமக்குக் கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வப் படிவத்தைத் தாண்டி, காமராஜர், ராஜீவ் காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் பெயர்களைக் கூறி வாழ்த்து முழக்கமிட்டார். இதனை உடனடியாகக் கவனித்த ஆளுநர் அர்லேகர், “இது உங்களுடைய பதவியேற்புப் பிரமாணத்தின் பகுதி அல்ல” என்று கூறி, அவரைத் தடுத்து நிறுத்தித் திருத்தினார். இந்தச் சம்பவம் விழாவில் கலந்துகொண்டவர்கள் மத்தியில் சற்றுப் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதிய அமைச்சரவையின் கூட்டுப் பிரதிநிதித்துவத்தில் மண்டல வாரியான சமநிலை, சமூக நல்லிணக்கம் மற்றும் சிறுபான்மையினருக்கான முக்கியத்துவம் ஆகியவை மிகத் துல்லியமாகப் பேணப்பட்டுள்ளன. சென்னை, கோவை, சேலம், காஞ்சிபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி எனத் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் சரிசமமான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, முகமது ஃபர்வாஸ் மற்றும் என். மேரி வில்சன் ஆகியோர் சிறுபான்மையின சமூகப் பிரதிநிதிகளாகவும், சி. விஜயலட்சுமி, ஜெகதீஸ்வரி, எஸ். கமலி ஆகிய மூன்று பெண்மணிகள் பெண் சிங்கங்களாக அமைச்சரவையில் தடம் பதித்துள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
