ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதல் பல குடும்பங்களை சோகத்தில் மூழ்க செய்து, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியதில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் இந்த தாக்குதலில் பயங்கரவாதிகளை முட்டாளாக்கி ஒரு பேராசிரியர் தன்னையும் தனது குடும்பத்தினரையும் காப்பாற்றியுள்ளார்.
பஹல்காம் தாக்குதலின்போது பயங்கரவாதிகள், மக்களை இஸ்லாமிய மந்திரத்தை (கல்மா) சொல்லுமாறு கூறினார்கள். அதை சொல்ல முடியாதவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இந்த நிலையில் அஸ்ஸாம் பல்கலைக்கழகத்தில் பெங்காலி துறையின் இணை பேராசிரியரான தேவாஷீஷ் பட்டாச்சாரியா தானும் தனது குடும்பமும் பஹல்காமில் உள்ள பைசரனாவின் புல்வெளிகளில் நிகழ்ந்த இந்த பயங்கரவாத தாக்குதலில் இருந்து தப்பிய சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.
நான் என் குடும்பத்துடன் ஒரு மரத்தின் கீழ் தூங்கிக்கொண்டிருந்தேன். திடீரென்று யாரோ கல்மா சொல்லும் ஒலி கேட்டது. உடனே நானும் அதை சொல்லத் தொடங்கினேன். பயங்கரவாதிகளில் ஒருவன், “நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்க?” என கேட்டான். நான் பயத்தில், மேலும் உரக்க கல்மா சொல்லத் தொடங்கினேன்.
அதன்பின், என்ன காரணம் என்று தெரியவில்லை, அந்த பயங்கரவாதி என்னை விட்டுவிட்டு என் அருகில் இருந்த நபரை சுட்டுக் கொன்றார். பின்னர், அந்த பயங்கரவாதி அவரை நேராக பார்த்துவிட்டு, விலகிச் சென்றுவிட்டார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, நானும் என் மனைவியும் மகனும் அங்கிருந்து தப்பியோடி வந்து விட்டோம் என தெரிவித்துள்ளார்.