இனி, 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிறார்களுக்கு தங்கள் கணக்குகளை சுயமாக நிர்வகிக்க வங்கிகள் அனுமதி அளிக்கலாம். இருப்பினும், ஒவ்வொரு வங்கியும் தங்கள் உள் ஆபத்து மேலாண்மை கொள்கையின் கீழ் தனிப்பட்ட நிபந்தனைகளை அமைத்துக்கொள்ளலாம். இதில் வைப்பு மற்றும் பணம் எடுத்தல் வரம்புகள், ஏ.டி.எம் கார்டு, டெபிட் கார்டு, இன்டர்நெட் வங்கிச் சேவை மற்றும் காசோலை புத்தகங்களுக்கான அணுகல் ஆகியவை அடங்கும்.
RBI அனைத்து வங்கிகளுக்கும், தங்களது செயல்முறை கொள்கைகளை 2025 ஜூலை 1க்குள் திருத்தவோ அல்லது ஏற்கக்கூடிய வகையில் மாற்றவோ உத்தரவிட்டுள்ளது. இதற்கு முன்னர், சிறார்களுக்கான சேமிப்பு அல்லது பிக்சட் டெபாசிட் கணக்குகள் இருந்தாலும், அவற்றை பெற்றோர்களே பயன்படுத்துவார்கள். ஆனால் இனி 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிறார்கள் பெற்றோர் உதவியின்றி தங்கள் கணக்குகளை இயக்க முடியும்.
ஆனால் அதே நேரத்தில் பணம் டெபாசிட் செய்ய, எடுக்க சில வரம்புகள் நிர்ணயம் செய்யப்படும் என்றும், இதுகுறித்த விதிகளை ஒவ்வொரு வங்கியும் தீர்மானிக்கலாம் என்றும் RBI தெரிவித்துள்ளது. மேலும் சிறார் கணக்குகளுக்கு இன்டர்நெட் வங்கி மற்றும் டெபிட் கார்டு போன்ற சேவைகள் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது..
18 வயது ஆன பிறகு, கணக்குதாரர்கள் வங்கிக்கு புதிய கையொப்பங்களை வழங்க வேண்டும். முன்னர் பராமரிப்பாளரால் இயக்கப்பட்ட கணக்குகள் அதிகாரப்பூர்வமாக மாற்றப்படும்.
SBI, HDFC போன்ற வங்கிகள் ஏற்கனவே 10 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிறார்களுக்கு SBI Pehla Kadam, HDFC Kids Advantage Account போன்ற சிறப்பு கணக்குகளை வழங்கி வருகிறன. தற்போது இந்த புதிய RBI உத்தரவு, இந்த விதிமுறைகளை அனைத்து வங்கிகளுக்கும் பொதுவாக அமல்படுத்துகிறது.