இந்திய இல்லத்தரசிகள் தான் உலகின் மிகச்சிறந்த Fund Managerகள்.. உதய் கோடக்

  தங்கம் விலை தற்போது 10 கிராமுக்கு ரூ.1 லட்சம் என்ற சிகரத்தை எட்டியிருக்கும் நிலையில், கோடக் மகிந்திரா வங்கியின் நிறுவனர் மற்றும் இயக்குநரான உதய் கோடக், சமூக வலைதளத்தில் இந்திய இல்லத்தரசிகள் பற்றிய…

housewives

 

தங்கம் விலை தற்போது 10 கிராமுக்கு ரூ.1 லட்சம் என்ற சிகரத்தை எட்டியிருக்கும் நிலையில், கோடக் மகிந்திரா வங்கியின் நிறுவனர் மற்றும் இயக்குநரான உதய் கோடக், சமூக வலைதளத்தில் இந்திய இல்லத்தரசிகள் பற்றிய பாராட்டைப் பதிவிட்டுள்ளார். தங்கத்தில் முதலீடு செய்யும் அவர்களின் தேர்வை காரணமாக கொண்டு, “உலகின் சிறந்த நிதி மேலாளர்கள்” என அவர் புகழ்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் X பக்கத்தில் அவர் கூறியதாவது:

தங்கத்தின் விலையேற்றத்தை பார்க்கும்போது இந்திய இல்லத்தரசிகள் தான் உலகின் மிகச்சிறந்த நிதி மேலாளர் என்பது வெளிப்படுத்துகிறது. உலகில் உள்ள அனைத்து நாடுகளின் அரசாங்கங்கள், மத்திய வங்கிகள், பொருளாதார வல்லுநர்கள்   இந்திய இல்லத்தரசிகளிடம் இருந்து  பாடம் கற்றுக் கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.

இந்த கருத்துகள் சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஒரு சிலர், “இல்லத்தரசிகள் தங்களிடம் நிதி சுதந்திரம் இல்லாததால் தங்கத்தைச் சேகரிக்கிறார்கள்” என்றும், “இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகளுக்கு எதிராக பாதுகாப்பாக தங்கத்தைத் தேர்வு செய்கிறார்கள்” என்றும் தெரிவித்தனர்.

இதே நேரத்தில், உதய் கோடக்கின் கருத்தை ஆதரித்து  Zoho நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் முதன்மை விஞ்ஞானியாக இருக்கும் ஸ்ரீதர் வேம்பு தனது  X-இல் எழுதியதாவது:

“உதய் கோடக் ஜி-யின் கருத்துடன் நான் முழுமையாக ஒத்துப் போகிறேன். தங்கத்திற்கான இந்தியர்களின் பாசமும், மற்ற சொத்துகளின் மீதான நம்பிக்கையின்மையும் நமது நீண்டகால நிலைத்தன்மைக்கும் நாகரிகத்தின் தொடர்ச்சிக்கும் அடித்தளமாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

“உலகளாவிய பொருளாதார சூழ்நிலை மோசமாகும் போது, இந்தியாவின் நிதி நிலைத்தன்மைக்கு தங்கமே ஆதாரமாக இருக்கும். தங்கம் தான் உண்மையான பணம். இந்தியாவின்  ஏழைகள் கூட இந்த உண்மையை அறிவார். அந்த அறிவே சக்தியாகும்.” என்று கூறியுள்ளார்.

இந்த வாரம் ஏப்ரல் 30ல் கொண்டாடப்படவுள்ள அக்ஷய திருதியை முன்னிட்டு, நேற்று இந்திய சந்தையில் தங்கம் விலை கடுமையாக உயர்ந்தது. 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.1,650 உயர்ந்து, டெல்லியில் ரூ.99,800-ஐ எட்டியது.
மேற்கண்ட விலையில் GST மற்றும் செய்கூலி கட்டணங்கள் சேர்க்கப்படுவதால், மொத்த விலையானது ரூ.1 லட்சத்தைத் தாண்டியது.

இதேபோல், உலகளாவிய சந்தையிலும் தங்க விலை புதிய உச்சத்தை எட்டியது. அமெரிக்காவின் அரசியல் பதற்றங்களால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்தாக தங்கத்தைத் தேர்வு செய்ததால் இந்த உயர் விலை ஏற்பட்டது. குறிப்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், Federal Reserve தலைவர் ஜெரோம் பவலை கடுமையாக விமர்சித்ததின் பின், சந்தை நம்பிக்கையை இழந்து, முதலீட்டாளர்கள் தங்கத்தின் பக்கம் மாறினர்.