சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவில், அந்த பெண், தாக்குதலின் போது ஒரு ஓட்டுநர் தன் மதத்தை கேட்டதாக கூறியிருந்தார். இந்த வீடியோவில் அந்த நபரின் புகைப்படமும் இடம் பெற்றிருந்ததால் அதிகாரிகள் அவரை அடையாளம் காண எளிதாக இருந்தது.
அயாஸ் அஹமத் ஜுங்கல் என்ற பெயருடைய அந்த நபர், கந்தர்பாலில் உள்ள கோஹிபோரா ரெய்சான் என்ற பகுதியில் வசிப்பவர். இதுகுறித்த புகார் எழும்பிய சில மணி நேரங்களில் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அவரை போலீசார் விசாரணைக்கு உட்படுத்திய பின், சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தற்போது அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.

“நாங்கள் உடனடி மற்றும் விரிவான சட்ட நடவடிக்கை எடுத்துள்ளோம். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது,” என காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
பஹல்காமில் நடந்த மிருகத்தனமான தாக்குதலுக்கு பிறகு இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளதால் அந்த நபரிடம் இருந்து கிடைத்த சில தகவல்களின் அடிப்படையில் பயங்கரவாதிகளை மறைந்து இருக்கும் இடங்களில் தேடுதல் வேட்டையில் இந்திய ராணுவம், CRPF, SSB, மற்றும் பரா படையினர் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, லஷ்கர்-எ-தொய்பா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் குழுவைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மேற்கொண்ட தாக்குதலில் 26 சுற்றுலாப்பயணிகள் கொல்லப்பட்டிருந்தனர். அதன் பின்னர் அதிகாரிகள் அந்த பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர், மேலும் உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பிற்காக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.