சூரி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் ஆவார். ஆரம்பத்தில் பின்னணியில் கூட்டத்தோடு கூட்டமாக நடிக்க ஆரம்பித்த சூரி இன்று பலரும் பாராட்டப்படும் நடிகராக இருக்கிறார். மதுரையில் பிறந்து வளர்ந்த இவர் 1997 ஆம் ஆண்டு சென்னைக்கு வந்து சினிமாவில் பின்னணியில் நடித்துக் கொண்டிருந்தார். தனது வயிற்று பிழைப்புக்காக சிறு சிறு வேலைகளை செய்து வந்தார். அவ்வப்போது நாடகங்களிலும் நடித்து வந்தார் சூரி.
2009 ஆம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தில் பரோட்டா சாப்பிடும் போட்டியில் நடித்து அந்த காட்சி பிரபலமானதால் பரோட்டா சூரி என்று பலராலும் அழைக்கப்பட்டார். இந்த படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. தொடர்ந்து நான் மகான் அல்ல, களவாணி, வேலாயுதம், வாகை சூடவா, மனம் கொத்தி பறவை, சுந்தரபாண்டியன் போன்ற பல முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நாயகனுக்கு நண்பனாக நகைச்சுவை கதாபாத்திரத்தில் தனது எதார்த்தமான நகைச்சுவையை வெளிப்படுத்தி பிரபலமானார் சூரி.
நகைச்சுவை நடிகராக இருந்த சூரியை வெற்றிமாறன் தனது விடுதலை படத்தின் மூலம் நாயனாக அறிமுகம் செய்தார். இந்த திரைப்படம் இரண்டு பாகங்களில் வந்து அவருக்கு பேரும் புகழையும் பெற்று தந்தது. அதைத் தொடர்ந்து கருடன், கொட்டுக்காளி போன்ற திரைப்படங்களில் நாயகனாக நடித்தார் சூரி. அவையெல்லாம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறவே தொடர்ந்து பல திரைப்படங்களில் நாயகனாக கமிட் ஆகி பிஸியான நடிகராக இருந்து வருகிறார் சூரி. இவர் நடித்த மாமன் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் சூரியை பற்றி மலையாள சினிமா ரசிகர்கள் புகழ்ந்து பேசி வருகிறார்கள். அப்படி அவர் என்ன செய்தார் என்று பார்த்தால், சமீபத்தில் சூரி மலையாள நடிகர் திலீப் அவர்களை சந்தித்து பேசும் ஒரு வீடியோ வெளியானது. அந்த வீடியோவில் நடிகர் திலீப்பை தவிர பல மலையாள சினிமா நடிகர்களை பார்த்து சூரி பேசியிருப்பார். அனைவரிடமும் மிகவும் தன்னடக்கத்தோடு கையை கட்டி பேசிக் கொண்டிருப்பார் சூரி. இதை பார்த்த மலையாள சினிமா ரசிகர்கள் சூரியைப் போல தன்னடக்கமான மனிதரை பார்க்க முடியாது மலையாள சினிமா நடிகர்கள் இவரைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் என்று கமெண்ட் செய்து பலவாறு அவரை புகழ்ந்து பேசி வருகிறார்கள்.