வைரலான பிரேம்ஜி திருமண அழைப்பிதழ்.. மணமகள், திருமணம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இயக்குநர் வெங்கட்பிரபு

By John A

Published:

சினிமாவின் பல்துறை வித்தகரான கங்கை அமரனின் மகனான நடிகர் பிரேம்ஜிக்கு தற்போது பிரேம்ஜிக்கு 44 வயதாகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் இந்த வருடம் எனக்கு திருமணம் ஆகப் போகிறது என புத்தாண்டு வாழ்த்துடன் தெரிவித்திருந்தார். தற்போது அது மெய்யாகும் வகையில் கல்யாணப் பத்திரிக்கை சோஷியல் மீடியாக்களில் வலம் வருகிறது. அதில் வருகிற 09.06.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் திருத்தணி முருகன் கோவிலில் பிரேம்ஜிக்கும், மணமகள் இந்துவுக்கும் திருமணம் நடைபெற உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரேம்ஜியின் இந்தத் திருமணம் அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 44 வயதிலும் மொரட்டு சிங்கிளாக இருந்த பிரேம்ஜி தற்போது புதுமாப்பிள்ளை ஆகப் போகிறார். அவரின் திருமணப் பத்திரிக்கை இணையதளங்களில் பரவி வருகிறது. இதனால் அவருக்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. இவரது கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதைத் தொடர்ந்து இவ்வளவு பெரிய பிரபலங்கள் ஏன் முறையாக யாருக்கும் அழைப்பு விடுக்கவில்லை என சோஷியல் மீடியாக்களில் முணுமுணுக்கத் தொடங்கினர்.

கருடன் படத்தில் மொரட்டு வில்லனாக மிரட்டிய நடிகர்.. அது இவர்தானா? மளமளன்னு வளர்ந்துட்டாரே..!

தற்போது பிரேம்ஜியின் சகோதரரும், இயக்குநருமான வெங்கட்பிரபு இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். அதில், “வரும் 9-ம் தேதி பிரேம்ஜி தான் விரும்பும் பெண்ணை சிறிய அளவில் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் அம்மாவின் ஆசீர்வாதத்துடன் கரம் பிடிக்கிறார். அம்மா வெகுவாக எதிர்பார்த்த இந்த திருமணத்தை நெருங்கிய உறவுகளுடனும், நண்பர்களுடனும் எளிமையான முறையில் நடத்த விரும்புகிறோம்.

இது தெரியாமல் நண்பர் ஒருவர் திருமண அழைப்பிதழை பொதுவெளியில் பகிர்ந்துவிட அது வைரலாகியது. எப்படி கல்யாணப் பத்திரிக்கை வைரல் ஆனதோ அதேபோல் மணமகளும் மீடியாவைச் சேர்ந்தவர் என்றும் புகைப்படங்கள் உலவுகின்றன. மணமகள் மீடியாவைச் சேர்ந்தவர் இல்லை. திருமணம் முடிந்தவுடன் புகைப்படங்களைப் பகிர்கிறேன். எங்களுடைய பிரைவசியை மதித்து இருந்த இடத்திலிருந்தே மணமக்களை வாழ்த்தி அதையும் வைரலாக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.” என்று வெங்கட்பிரபு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.

எனினும் திருமணம் முடிந்தவுடன் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் எனத் தெரிகிறது. அதில் முக்கிய பிரபலங்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.