தயாரிப்பாளர் கிடைக்காமல் 2 வருடமாக அலைந்த அயோத்தி பட இயக்குநர்.. கடந்த ஆண்டின் மிகச் சிறந்த படமாக மாறிய வரலாறு..

By John A

Published:

2023-ம் ஆண்டு வெளியான மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்று அயோத்தி. அப்துல் மாலிக்காக சசிக்குமார் இந்தப் படத்தில் இயல்பாக நடித்திருப்பார். பொதுவாகவே சசிக்குமார் படங்களில் நட்பு, உதவி, சமூகம் என ஆழமான கருத்துக்கள் இருக்கும். அந்த வகையில் இப்படி ஒரு கதைக்கு சசிக்குமாரைத் தேர்ந்தெடுத்த இயக்குநர் மந்திரமூர்த்திக்கு ஒரு ராயல் சல்யூட்.

அயோத்தி நகரிலிருந்து ராமேஸ்வரம் சுற்றுலா வரும் குடும்பம் ராமநாதபுரத்தில் விபத்தில் சிக்க அதில் தாய் உயிரிழக்கிறார். தாயை எப்படி தனது சொந்த ஊருக்கு கொண்டு செல்கின்றனர். அதற்கு சசிக்குமார் எப்படி உதவுகிறார் என்பது கதை.

இந்தப் படத்தினை வெறும் சினிமா என்பதைத் தாண்டி ஒரு மனிதநேயம் மிக்க கதையைக் கூறியிருக்கிறார் இயக்குநர் மந்திர மூர்த்தி. சசிக்குமார் நடிப்பில் வெளிவந்த மிகச்சிறந்த படங்களில் ஒன்றான அயோத்தி படம் எப்படி உருவானது தெரியுமா? இப்படத்தின் இயக்குநர் மந்திரமூர்த்தி முதலில் ஒன்லைன் மட்டும் யோசித்திருக்கிறார். பின் அவரது நண்பர் ஒருவர் மதுரையில் இருக்க அவர் வீட்டில் சில காலம் தங்கி மதுரை அரசு பொது மருத்துவமனை பிணவறைக்கு தினமும் சென்று உயிரிழந்தவர்கள் எப்படி ஒப்படைக்கப்படுகிறார்கள், அதற்குரிய நடைமுறைகள் குறித்த சந்தேகங்களைத் தெரிந்து கொண்டார்.

செல்வராகவனின் வளர்ச்சியைப் பார்த்து மெய்சிலிர்த்த தந்தை கஸ்தூரிராஜா.. வறுமையைத் தாங்கி தோள் கொடுத்த தலைமகன்

அப்போது அங்கு நடக்கும் எமோஷனல் சம்பவங்கள், காவல் துறை சார்ந்த விஷயங்கள் போன்றவை பற்றி குறிப்பெடுத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் மட்டும் இறந்தவர்களை வீட்டிற்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்திருக்கிறார். ஒன்றல்ல இரண்டல்ல, அனைத்து பிரேதங்களுக்கும் இந்தப் பணியைச் செய்து கொடுக்க அப்போது அவரைப் பற்றி விசாரித்திருக்கிறார் மந்திர மூர்த்தி.

அவர் அப்பகுதியில் டீக்கடை வைத்துள்ளார் எனவும், பிணவறை தெரியும் வகையில் தனது கடையில் சிசிடிவி கேமரா அமைத்து இறந்தவர்கள் பற்றிய நடைமுறைகளை கண்காணித்து அதன்படி, ஆதரவு இல்லாதவர்களுக்கு அடக்கம் செய்வதற்கான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து வருகிறார். மதுரை அரசு பொதுமருத்துவமனையின் கீழ் கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் பதிவாகும் இறப்பு, விபத்து இறப்பு, தற்கொலை வழக்குகள் மதுரை அரசு பொதுமருத்துவமனையில்தான் பிரேதப் பரிசோதனை நடத்தப்படுகிறது.

இதனால் அனைத்து காவல் நிலையங்களுக்கும் இவரைப் பற்றித் தெரியும். இவ்வாறு இவர் கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கில் இறந்தவர்களை நல்லடக்கம் செய்யும் பணியைக் கேள்விப்பட்டு மெய்சிலிர்த்த இயக்குநர் மந்திரமூர்த்தி அவரையே இன்ஸ்பிரேஷனாக வைத்து அயோத்தி படத்தினை எடுத்துள்ளார். ஒருவழியாக கதை தயார் செய்த பின்னர் கிட்டதட்ட இரண்டு வருடங்களாக தயாரிப்பாளரைத் தேடி அலைந்துள்ளார். ஒருவரும் தயாரிக்க முன்வராத நிலையில் அதன்பின் டிரைடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தினைத் தயாரித்தது. படம் ஆரம்பத்தில் கூட்டம் இல்லாத நிலையில் படத்தினைப் பார்த்தவர்கள் கொடுத்த நல்ல விமர்சனங்கள் அதன்பின் படத்தினை வெற்றி பெறச் செய்தது. சசிக்குமாருக்கும் இந்தப் படம் ஒரு மைல்கல்லாக அமைந்தது.