நடிகர் சங்கப் பொதுச் செயலாளராக இருக்கும் நடிகர் விஷால் அவ்வப்போது பொது வெளியில் சில கருத்துக்களைக் கூறி சோஷியல் மீடியாக்களில் வைரலாக வலம் வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் பொதுவெளிகளில் அவர் உணவருந்தும் போது மும்மதக் கடவுள்களையும் வணங்கி விட்டு சாப்பிடுவது போன்ற வீடியோ வைரலானது. இதனையடுத்து அவர் தற்போது நடித்து முடித்து ரிலீஸுக்கு தயாராக உள்ள ‘ரத்னம்’ பட ஷுட்டிங்கின் போது ஒரு பகுதிக்கு இலவசமாக குடிநீர் வசதி ஏற்படுத்திக் கொடுத்து அப்பகுதி மக்களின் தாகம் தீர்க்க உதவினார்.
மேலும் நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்த பொழுது அடுத்த இரண்டு நாட்களில் இவரும் அரசியல் கட்சி தொடங்குவார் என்று பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இப்போது அந்த எண்ணம் இல்லை என்று அறிக்கை வெளியிட்டார். இப்படி விஷாலைச் சுற்றி நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையல் கடந்த 19-ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவிற்கு தன்னுடைய வாக்கைச் செலுத்துவதற்காக சைக்கிளில் வந்து பரபரப்பைக் கிளப்பினார்.
ஏற்கனவே தளபதி விஜய் இதுபோன்று கடந்த தேர்தலில் சைக்கிளில் வந்து ஓட்டுப் போட்டது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு அப்போதே அடித்தளம் இடப்பட்டது. இந்நிலையில் விஷாலும் சைக்கிளில் வந்து ஓட்டுப் போட்டது குறித்து சேலத்தில் நடந்த ரத்னம் பட புரமோஷன் விழாவில் செய்தியாளர்கள் கேட்ட பொழுது,
“என்னிடம் வண்டி எதுவும் அப்போது இல்லாததால் நான் சைக்கிளில் வந்தேன். மேலும் எனது பெற்றோரிடம் தான் கார் உள்ளது. இங்குள்ள சாலைகளில் வண்டி ஓட்டுவதே கஷ்டம்” என்று கூறியிருக்கிறார். விஷாலின் இந்த பதில் ஆளுங்கட்சியை எரிச்சலடைய வைத்துள்ளது.
மேலும் தனது அரசியல் என்ட்ரி 2026 இருக்கலாம் எனவும் சூசமாகத் தெரிவித்துள்ள விஷால் தற்போது ரத்னம் பட புரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இப்படி சினிமா, அரசியல், சமூக சேவை மூன்றிலும் பரபரப்பாகச் செயல்படும் விஷால் விரைவில் அடுத்த பட வேலைகளில் இறங்க உள்ளார்.
ஊடகத் துறையில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வருகிறேன். அச்சு ஊடகம், காட்சி ஊடகம், டிஜிட்டல் ஊடகம் ஆகியவற்றில் செய்திகள், கட்டுரைகள், சிறப்புச் செய்திகள், பேட்டிகள், விளம்பரப் பிரிவு, விநியோகம் என அனைத்துத் துறைகளிலும் பணியாற்றியிருக்கிறேன்.
