கடவுள் ஒருவர் தானே. பிறகு ஏன் இத்தனை கடவுள்கள் இந்து மதத்தில் உள்ளன என்று கேள்வி கேட்பார்கள். அதற்கு அதற்கு ஞானியர் சொல்லும் சூப்பர் பதில் என்னன்னு பார்க்கலாமா..!
மனிதனுக்கு பல வியாதிகள் வருகின்றன. அதற்கு பல மருந்துகளும் உள்ளன. அது மாதிரி தான் நமக்கு வரும் பல பிரச்சனைகளுக்கு பலவிதமான கடவுள்களை நாம் வழிபடுகிறோம்.
ஒரே நபர் தான். ஆனால் அவர் ஒருவருக்கு தாயாகவும், மற்றொருவருக்கு தங்கையாகவும், அக்காவாக ஒருவருக்கும், இன்னொருவருக்கு தாரமாகவும், மற்றவருக்கு தோழியாகவும் இன்னும் சொல்லப்போனால், தொழிலாளி, முதலாளியாகவும் என பல வித வடிவங்களில் வருகிறார்.
அதே போலத்தான் கடவுளும் பலவித வடிவங்களில் வருகிறார். உதாரணமாக தாயாக வரும் கடவுளை அம்மன் என்றும், தந்தையாக வருபவரை சிவன் என்றும் சொல்கிறார்கள். பிள்ளையார், கிருஷ்ணரை நண்பராகவும், தட்சிணாமூர்த்தியை குருவாகவும், படிப்புக்கு சரஸ்வதியையும் வணங்குகின்றனர்.
லட்சுமியை செல்வமகள் என்கிறார்கள். குபேரனை செல்வமகன் என்கிறார்கள். வருணபகவானை மழைக்குரிய கடவுளாகவும், அக்னி பகவானை நெருப்புக்கு உரியவராகவும், அறிவுக்கு குமரனையும், வழிகாட்டிக்கு பார்த்தசாரதியையும், உயிர் மூச்சுக்கு வாயுபகவானையும் வழிபடுகின்றனர். அதே போல தன்வந்திரியை மருத்துவக் கடவுளாகவும், வீரத்துக்கு மலைமகளையும், ஆயகலைக்கு மயனையும், கோபத்திற்கு திரிபுரம் எரித்த சிவனையும் சொல்கின்றனர். ஊர்க்காவலுக்கு அய்யனாரையும், வீட்டுக் காவலுக்கு பைரவரையும், வீட்டுப் பாலுக்கு காமதேனுவையும், கற்புக்கு சீதையையும், நன்னடைத்தைகளுக்கு ராமபிரானையும் வழிபடுகின்றனர். அதே போல பக்திக்கு அனுமன், குறைகளைக் கொட்ட வெங்கடாசலபதி, நன் சகோதரனுக்கு லட்சுமணன், கும்பகர்ணன், வீட்டுக்கு வாஸ்து புருஷன், மொழிக்கு முருகன் என்றும் வழிபடுவர்.
அது மட்டும் அல்லாமல் கூப்பிட்ட குரலுக்கு ஆதிமூலமான சக்கரத்தாழ்வார், மாயக்கிருஷ்ணனையும், தர்மத்திற்கு ஆர்யமானையும், போர்ப் படைகளுக்கு வீரபாகுவையும், பரதத்திற்கு நடராசனையும், தாய்மைக்கு அம்பிகையையும், அன்னத்துக்கு அன்னபூரணியையும், மரணத்துக்கு எமனையும், பாவக்கணக்கிற்கு சித்திரகுப்தன், பிறப்புக்கு பிரம்மன், சுகப்பிரசவத்துக்கு கர்ப்பரட்சாம்பிகை என பலவித கடவுள்களை வழிபடுவர்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



