தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் களம் என்பது எப்போதும் கணிக்க முடியாத பல ஆச்சரியங்களையும், அதிரடி திருப்பங்களையும் கொண்டது என்பதற்கு தற்போதைய சூழலே மிகச்சிறந்த உதாரணமாகும். ஒருபுறம், பல ஆண்டுகளாக கட்சிக் கட்டமைப்பை உருவாக்கி, தீவிரமாகப் பிரச்சாரம் செய்தும் தேர்தல் அரசியலில் தொடர் பின்னடைவுகளை சந்தித்து வரும் பாசிவ் அரசியல் போக்கு; மறுபுறம், கட்சி தொடங்கிய முதல் தேர்தலிலேயே மாபெரும் மக்கள் புரட்சியை ஏற்படுத்தி, கோட்டையைக் கைப்பற்றிய அசுர வேகம் என தமிழக அரசியல் தற்பொழுது இரண்டு துருவங்களாக காட்சியளிக்கிறது. இந்த இரு வேறுபட்ட அரசியல் பயணங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதுதான் தற்பொழுது சமூக வலைத்தளங்களிலும், அரசியல் மேடைகளிலும் ஹாட் டாபிக்காக மாறியுள்ளது.
பாஜகவின் முக்கிய முகமாக அறியப்படும் அண்ணாமலையின் தேர்தல் அரசியல் பயணம் என்பது ஆரம்பம் முதலே தோல்விகள் நிறைந்த ஒன்றாகவே அமைந்துவிட்டது என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிகாட்டுகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் நேரடியாக களம் கண்ட அண்ணாமலை அங்கும் படுதோல்வியை சந்தித்தார். அந்தத் தேர்தலில் பாஜக வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இதனை தொடர்ந்து, அவர் மாநில தலைவராக பொறுப்பேற்றுப் பல்வேறு அதிரடி அரசியல் நகர்வுகளை மேற்கொண்ட போதிலும், தேர்தல் கள முடிவுகள் அவருக்கு சாதகமாக அமையவில்லை என்பதே எதார்த்தம்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் கோவை தொகுதியில் நட்சத்திர வேட்பாளராக அண்ணாமலை களம் இறக்கப்பட்டார். ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமும் கோவை மீது திரும்பியிருந்த சூழலில், அங்கேயும் அவருக்குத் தோல்விதான் மிஞ்சியது. அதுமட்டுமன்றி, அந்தத் தேர்தலில் அவர் தனித்து வியூகம் அமைத்து உருவாக்கிய கூட்டணி, தமிழகத்தில் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் பூஜ்ஜியம் என்ற கணக்கிலேயே சுருண்டது. அண்ணாமலையின் ஆக்ரோஷமான பேச்சுகளும், நடைபயணங்களும் தேர்தல் வாக்குகளாக மாறவில்லை என்பதை இந்த தொடர் தோல்விகள் வெளிச்சம் போட்டுக் காட்டின.
சமீபத்தில் நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலிலும் அண்ணாமலையின் வியூகங்கள் எடுபடவில்லை என்றே கூற வேண்டும். இந்தத் தேர்தலில் அவர் நேரடியாக போட்டியிடவில்லை என்றாலும், தமிழகம் முழுவதும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார். ஆனால், அவரது இத்தனை கடுமையான உழைப்பு மற்றும் பிரச்சாரத்திற்கு பிறகும், பாஜக ஒட்டுமொத்தத் தமிழகத்திலும் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே தட்டுத்தடுமாறி வெற்றி பெற முடிந்தது. இதன் மூலம் 2021, 2024 மற்றும் 2026 என தொடர்ந்து மூன்று முக்கிய தேர்தல்களிலும் அண்ணாமலைக்கு தோல்வி மேல் தோல்விதான் கிடைத்துள்ளது.
இதற்கு முற்றிலும் நேர்மாறான ஒரு அசாத்தியமான அரசியல் எழுச்சியை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நிகழ்த்தி காட்டியுள்ளார். கட்சி தொடங்கி, மக்களின் நாடி துடிப்பை அறிந்து, முதல் தேர்தலிலேயே இரண்டு பாரம்பரிய திராவிட கட்சிகளையும், தேசிய கட்சிகளையும் ஓரம் கட்டிவிட்டு 108 இடங்களை கைப்பற்றி சிங்கிள் லார்ஜஸ்ட் பார்ட்டியாக தவெக உருவெடுத்துள்ளது. எந்தவிதமான நீண்டகால அரசியல் பாரம்பரியமும் இல்லாமல், தேர்தல் களம் கண்ட முதல் முயற்சியிலேயே 1.75 கோடி மக்களின் பேராதரவோடு ஆட்சிக்கட்டிலில் ஏறி, முதலமைச்சராக பொறுப்பேற்று சாதனை படைத்துள்ளார் விஜய்.
இத்தகைய சூழலில், மூன்று தேர்தல்களில் தொடர் தோல்விகளை சந்தித்து, இன்னும் தேர்தல் அரசியலில் தங்களது கணக்கை தொடங்கவே திணறி வரும் அண்ணாமலையையும்; களம் இறங்கிய முதல் ஆட்டத்திலேயே கோட்டையைப் பிடித்து வரலாறு படைத்த முதலமைச்சர் விஜய்யையும் ஒரே தராசில் வைத்து ஒப்பிடுவதே மிகப்பெரிய தவறு என்று நடுநிலையாளர்கள் கருதுகின்றனர். மக்கள் செல்வாக்கு யாரிடம் இருக்கிறது, உண்மையான அரசியல் புரட்சி எங்கே நடந்துள்ளது என்பதை தமிழக மக்கள் தங்களது வாக்குகளின் மூலம் தெளிவாக நிரூபித்துவிட்டனர். எனவே, இவர்களை ஒப்பிட்டுப் பேசுவது எந்தவிதத்திலும் நியாயமாக இருக்காது என்பதே தற்போதைய அரசியல் எதார்த்தம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
