2026 வைகாசி விசாகத் திருநாள் வரும் மே 30 சனிக்கிழமை வருகிறது. இந்த நன்னாளில் முருகப்பெருமானுக்கு விரதம் இருந்து வழிபடுவது சிறப்பு. முந்தைய நாளே வீட்டை சுத்தம் செய்து முருகப்பெருமானின் படம், விளக்கு உள்ளிட்டவற்றை சுத்தம் செய்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். வைகாசி விசாகத்தினத்தன்று அதிகாலை எழுந்து குளித்து விட்டு முருகப்பெருமானின் படத்துக்கு சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். விக்கிரகம் வீட்டில் இருந்தால் அன்றைய தினம் முருகப்பெருமானின் மனம் குளிர பால், பன்னீர், சந்தனம் ஆகியவற்றால் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.
பூஜைகளைத் துவங்குவதற்கு முன்னால் முதலில் விநாயகப்பெருமானுக்கு அவருக்கு உரிய மந்திரங்களைச் சொல்லி வழிபட்டு வைகாசி விசாக பூஜைகளை ஆரம்பிக்க வேண்டும். முருகப்பெருமானுக்கு 6 வகை மலர்களை வைத்து வழிபடுவது என்பது சிறப்பு. எந்த வகை மலர்கள் கிடைக்கிறதோ அவற்றில் ஏதாவது 6 வகை மலர்களைப் பூஜைக்காக எடுத்துக் கொள்ளுங்கள்.
கிடைக்கும் என்பவர்கள் முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்தமான சிவப்பு வெட்சி மலர், முல்லை, மல்லி, செவ்வரளி, தாமரை, செண்பகப்பூ என 6 வகை மலர்களால் முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து வழிபடலாம். அதே போல ஏதாவது 6 வகையான இனிப்பு வகைகள் செய்து முருகப்பெருமானுக்கு நைவேத்தியமாக வைத்து படையல் செய்யலாம். 6 நெய் விளக்குகள் ஏற்றி வைத்து திருப்புகழ் பாராயணம் செய்யலாம். வேல் மாறல், மகாமந்திரத்தையும் முருகப்பெருமான் நமக்கு அருகிலேயே இருக்கிறார் என நினைத்து பாராயணம் செய்ய வேண்டும்.
2 கைகளால் மலர்களை எடுத்து நெஞ்சுக்கு அருகில் வைத்து குடும்பத்தில் உள்ள அனைவரின் பெயர்களையும் மனதிற்குள் சொல்லி ”முருகா என்னுடைய குடும்பத்தில் உள்ள அனைவரும் உன்னுடைய அடியவர்கள். அவர்களுக்கு என்ன வேண்டும் என நாங்கள் கேட்கும் அளவுக்கு எங்களுக்கு ஞானம் கிடையாது. உன்னுடைய அருள் இருந்தால் அனைத்தும் கிடைக்கும். உன்னுடைய அருளை நிறைவாகக் கொடு” என மனப்பூர்வமாக வேண்டிக் கொள்ள வேண்டும். முருகப்பெருமானின் மந்திரங்களைச் சொல்லி மலர்களை முருகப்பெருமானின் பாதத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.
வீட்டில் வழிபட்ட பிறகு அருகில் உள்ள முருகன் கோவிலுக்குச் சென்று உங்களால் முடிந்த பூ, பால், நெய் வாங்கிக் கொடுக்கலாம். அன்றைய நாளில் முருகப்பெருமானைத் தரிசனம் செய்து விட்டு முடிந்தால் அடியவர்களுக்கு நம்மால் முடிந்த தான, தர்மங்களைச் செய்யலாம். 2 பேருக்காவது அன்னதானம் செய்வது சிறந்த பலனைத் தரும். வைகாசி விசாகம் முருகப்பெருமானின் மகிழ்ச்சிக்குரிய தினம் என்பதால் அன்றைய நாளில் இனிப்புகளை வாங்கி மற்றவர்களுக்கு தானம் செய்வதும் சிறப்பு.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



