மியூஸியமில் இருந்த 3,500 ஆண்டு பழைய பானை.. சிறுவனால் நேர்ந்த குளறுபடி.. எதுக்காக பயன்படுத்தப்பட்டது தெரியுமா..

By: Ajith V

தற்போது நாம் வாழ்ந்து வரும் காலக்கட்டத்தில் இருந்து சுமார் 50 முதல் 100 ஆண்டுகளுக்கு முன்பு வரை என்ன நடந்தது என்பது பற்றியும், என்ன வரலாறு உள்ளது என்பது பற்றியும் நமது குடும்பத்தினர் மத்தியில் கேட்டு தெரிந்து கொள்ள முடியும். ஆனால், அதை தாண்டி பல நூறு ஆண்டுகள் முன்பு என்ன நடந்தது என்பது பற்றி தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் அருங்காட்சியகம், புத்தகங்கள், வரலாற்று தகவல்கள் அடங்கிய பழங்கால இடங்கள் என சரித்திர ஆதாரத்துடன் தெரிந்து கொள்ள முடியும்.

புத்தகங்கள் உள்ளிட்டவற்றுக்கு நிகராக தொல்பொருள் ஆய்வுகள் மூலமும் பல பழங்கால பொருட்கள் கிடைத்து வரும் சூழலில், அவை எல்லாம் சேகரித்து வைக்கக் கூடிய அருங்காட்சியகம் ஒன்றில் நடந்த சம்பவம் பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம்.

இஸ்ரேல் நாட்டின் ஹைஃபா நகர் என்னும் பகுதியில் அமைந்துள்ளது ஹெக்ட் அருங்காட்சியகம் (Hecht Museum). இங்கே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான நிறைய சரித்திர பொருட்கள் மக்கள் காட்சிக்கும் வைக்கப்பட்டுள்ளது. அதிலும், பல பொருட்கள் கண்ணாடிக்குள் இல்லாமல், பாதுகாப்பும் இன்றி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அப்படி ஒரு சூழலில், 4 வயது சிறுவன் ஒருவன் தனது குடும்பத்தினருடன் அந்த ஹெக்ட் அருங்காட்சியகத்தை நேரில் கண்டுள்ளார். அப்போது அங்கே சுமார் 3,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பானை ஒன்றும் இருந்துள்ளது. அந்த பானைக்குள் என்ன இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும் என்ற ஆவலும் அந்த சிறுவனின் குழந்தை மனதில் உருவாகி உள்ளது.

இதனால், எந்த பாதுகாப்பு கண்ணாடியும் இல்லாமல் இருந்த அந்த பானையை சிறுவன் பிடித்து இழுக்க, துண்டு துண்டாக உடைந்து போயுள்ளது. இதனை பார்த்ததும் அந்த சிறுவனின் பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். ஆனால், சிறுவன் செயல் மீது அருங்காட்சியத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்கமாட்டாரகள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.

மேலும் பாதுகாப்பு கண்ணாடி இருந்தால் பழமையான பொருட்களை மக்களால் சரிவர ரசிக்க முடியாது என்பதற்காக தான் எந்த தடைகளும் இன்றி அங்கே வெறுமென வைக்கப்பட்டிருந்ததாகவும் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். அந்த ஜாடி பைபிள் காலத்தில் மது அல்லது ஆலிவ் எண்ணெய் உள்ளிட்ட திரவங்களை சேமித்து வைப்பதற்காக பயன்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் கூறுகின்றது.

அதே போல நிபுணர் ஒருவரின் உதவியுடன் இந்த பானை மீண்டும் பழையது போல வடிவமைக்கப்படும் என்றும் அருங்காட்சிகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல், தெரியாமல் ஜாடியை உடைத்த சிறுவனின் குடும்பத்தினருக்கு அது பழைய நிலையில் தயாரானதும் அருங்காட்சியம் வந்து பார்த்து செல்ல அழைப்பும் விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அதே வேளையில் தனது மகனின் செயலுக்கு மன்னிப்பு கேட்ட அவரது தந்தை, என்ன தான் மீண்டும் அந்த ஜாடியை தயார் செய்தாலும் பழைய பொலிவு இருக்காது என்றும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உங்களுக்காக...