கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் ராணுவ தளங்களை இந்தியா தாக்கி நடத்திய நான்கு நாள் ‘மினி போர்’ முடிவடைந்த போதிலும், அந்த தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய பாகிஸ்தான் இன்னமும் போராடி வருவதாக பாதுகாப்பு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் கிரணா மலைகள் பகுதியில் உள்ள அணு ஆயுத கிடங்கை இந்தியா தாக்கியதாக முதலில் தெரிவித்த புவி-உளவு நிபுணர் டேமியன் சைமன் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
டேமியன் சைமனின் சமீபத்திய ‘X’ சமூக ஊடக பதிவுகளின்படி, செயற்கைக்கோள் படங்கள் ராவல்பிண்டிக்கு அருகில் உள்ள நூர் கான் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் புதிய கட்டுமான பணிகளை தொடங்கியுள்ளதை காட்டுகின்றன. ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய படைகள் குறிவைத்த இடங்களில் இதுவும் ஒன்றாகும்.
“மே 2025 மோதலின்போது இந்தியா தாக்கிய இடத்தில், நூர் கான் விமானப்படை தளத்தில் பாகிஸ்தான் ஒரு புதிய வசதியை நிர்மாணித்துள்ளது போல தெரிகிறது,” என்று டேமியன் சைமன் பதிவிட்டுள்ளார்.
வடக்கு சிந்து மாகாணத்தில் உள்ள ஜாகோபாபாத் விமானப்படை தளத்தில் இந்திய தாக்குதல்களால் சேதமடைந்த ஹேங்கர் இன்னமும் சீரமைப்பில் இருப்பதாகவும், அதன் கூரை படிப்படியாக பிரிக்கப்பட்டு வருவதாகவும் சைமன் தெரிவித்துள்ளார். முழுமையான மறுகட்டுமான பணிகளை தொடங்குவதற்கு முன், உட்புற சேதங்களை மதிப்பிடுவதற்காக இது செய்யப்படுவதாக அவர் கருதுகிறார்.
இந்திய இராணுவத் தளங்கள் மற்றும் பொதுமக்கள் பகுதிகளை பாகிஸ்தான் தாக்கியதை தொடர்ந்து, இந்தியா பதிலடி கொடுத்தது. ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளம் மற்றும் ஜாகோபாபாத் விமானப்படை தளம் தவிர, முரித், ரஃபிக்குய், முஷாஃப், போலாரி, காத்ரிம், சியால்கோட் மற்றும் சக்கூர் ஆகிய இடங்களில் உள்ள பாகிஸ்தான் விமானப்படை தளங்கள் உட்பட பத்து இராணுவ தளங்களை இந்திய படைகள் குறிவைத்தன.
மே மாதத்தில், விங் கமாண்டர் வியோமிகா சிங், பாகிஸ்தானின் ஆத்திரமூட்டும் தாக்குதல்களுக்கு பிறகு, தரை மற்றும் வான் வழிகளில் பாகிஸ்தானுக்கு தாங்க முடியாத இழப்புகள் ஏற்பட்டதாக கூறியிருந்தார்.
ராவல்பிண்டிக்கு அருகில் உள்ள சக்லாலா நூர் கான் விமானப்படை தளத்தின் மீதான தாக்குதல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இந்த தளம் பாகிஸ்தானின் அணு ஆயுத கிடங்குகளை மேற்பார்வையிடும் திட்டப்பிரிவின்தலைமையகத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
இந்திய தாக்குதல்களுக்கு பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப், ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது நூர் கான் விமானப்படை தளம் உட்பட முக்கிய இராணுவ தளங்களை இந்திய ஏவுகணைகள் தாக்கியதை ஒப்புக்கொண்டார். ஏப்ரலில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாகவே இந்தியா இந்த துல்லியத் தாக்குதல்களை நடத்தியது இந்த ஒப்புதல் மூலம் உறுதி செய்யப்பட்டது.
பாதுகாப்பு ஆய்வாளர் டேமியன் சைமன், பாகிஸ்தானின் சர்கோதா பகுதியின் கூகுள் எர்த் படத்தை ஜூலை மாதம் பகிர்ந்திருந்தார். அது ஜூன் மாதத்தை சேர்ந்தது என்று கூறிய அவர், அதில் “மே 2025ல் கிரணா மலைகள் மீது இந்தியா நடத்திய தாக்குதலின் சேதமடைந்த பகுதி காணப்படுவதாக கூறியிருந்தார்.
செயற்கைக்கோள் படங்கள் மூலம் கிடைக்கும் தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம், குறிப்பாக இந்தியா-பாகிஸ்தான் பகுதியில் உள்ள மோதல் மண்டலங்கள் குறித்த தகவல்களை சரிபார்ப்பதில் டேமியன் பிரபலமானவர். இந்திய இராணுவ மற்றும் பொதுமக்கள் தளங்களை பாகிஸ்தான் தாக்கியதற்கு பதிலடியாக, இந்தியா துல்லியமான ஆயுதங்களை பயன்படுத்தி பாகிஸ்தானுக்குள் ஆழமாக சென்று 11 இராணுவத் தளங்களைத் தாக்கிய நிலையில், இனிமேலாவது பாகிஸ்தான், இந்தியாவுடன் மோதுவதை தவிர்த்து தனது நாட்டின், நாட்டு மக்களின் வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்று சர்வதேச அரசியல் வல்லுனர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
