தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எதிர்கொள்ளும் அரசியல் நெருக்கடிகள் பெரும் பேசுபொருளாகியுள்ளன. திமுக அரசு தலித் சமூகத்தின் வாக்குகளை தக்கவைக்க விரும்பினாலும், அந்த சமூகத்தின் பிரதிநிதியாக விளங்கும் திருமாவளவனை தகுந்த அங்கீகாரத்துடன் நடத்த மறுப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. குறிப்பாக, விசிக தரப்பில் 10 தொகுதிகள் கோரப்பட்ட நிலையில், திமுக தலைமை அதனை 5 அல்லது 6 இடங்களாக குறைக்கப் பார்ப்பது திருமாவளவனை அரசியல் ரீதியாக ஒடுக்கும் முயற்சியாகவே விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது.
திருமாவளவனை தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைத்தபோது, அவர் ஆரம்பத்தில் அறிவாலயம் செல்ல மறுத்தது திமுகவின் அடக்குமுறைக்கு அவர் காட்டிய எதிர்ப்பாக கருதப்படுகிறது. ஒரு ரகசிய கருத்துக்கணிப்பில், தலித் இளைஞர்களின் வாக்குகள் தவெக தலைவர் விஜய் பக்கம் சாய்ந்துவிட்டதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இது திருமாவளவனின் அரசியல் வலிமையை குறைத்து மதிப்பிடுவதற்கும், அவருக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்குவதற்கும் திமுக கையாளும் ஒரு யுக்தி என்று அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உங்களுக்கு இவ்வளவுதான் என்று அவரை மட்டம் தட்டும் போக்கு திமுக கூட்டணியில் நிலவுவதாக கூறப்படுகிறது.
தமிழக மக்கள் தொகையில் சுமார் 24 சதவீதமுள்ள தலித் சமூகத்தின் ஒருமித்த தலைவராக திருமாவளவன் உருவெடுத்துள்ளார். அந்த சமூகத்தை ஒரு வலிமையான அரசியல் சக்தியாக ஒருங்கிணைத்த பெருமை அவரையே சாரும். திருமாவளவனுக்கு சுமார் 7 முதல் 8 சதவீத வாக்கு வங்கி உறுதியாக இருக்கும் நிலையில், வெறும் 28 சதவீத வாக்குகளை வைத்துள்ள திமுக 180 தொகுதிகளில் போட்டியிட நினைப்பதும், தனக்கு கீழ் பாதியாக உள்ள விசிகவிற்கு 10 தொகுதிகளை கூட ஒதுக்க மறுப்பதும் மிகப்பெரிய அரசியல் அநீதியாக பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணியில் இணக்கமாக செயல்பட்டாலும், உரிமைக்குரல் எழுப்பும்போது திருமாவளவன் வஞ்சிக்கப்படுவதாக விசிக தொண்டர்கள் குமுறுகின்றனர். மதச்சார்பின்மை என்ற ஒற்றை ஆயுதத்தை காட்டி, பாஜக மற்றும் பாமகவை எதிரியாக சித்தரித்து விசிகவை திமுக தன்னுடனேயே கட்டி போட்டுள்ளது. ஆனால், அதே சமயம் திமுகவின் குடும்ப அரசியலும், நிதி விவகாரங்களும் செழிக்கும் வேளையில், கூட்டணியில் உள்ள தலித் இயக்கத்தின் நியாயமான கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுகின்றன. கொள்ளையில் பங்கு கேட்கவில்லை, தங்களுக்குரிய அரசியல் உரிமையையே திருமாவளவன் கேட்கிறார் என்ற வாதம் வலுவாக முன்வைக்கப்படுகிறது.
தற்போதுள்ள இழுபறி நிலையில், திருமாவளவனை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட சொல்லி திமுக தலைமை அழுத்தம் கொடுப்பதாக தெரிகிறது. கட்சியின் தனித்துவத்தை காக்க பானை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற விசிகவின் நிலைப்பாட்டை சிதைக்க திமுக முயல்கிறது. ஒருவேளை விசிக தனது சின்னத்தில் அதிக இடங்களில் வென்றால், அது பின்னாளில் தங்களுக்கு போட்டியாக மாறும் என்ற அச்சம் திமுகவிற்கு உள்ளது. இதன் காரணமாகவே, திருமாவளவனை தனது சின்னத்திற்குள் முடக்கி, அவரது அரசியல் வளர்ச்சியை சீர்குலைக்க திமுக திட்டமிட்டு வருவதாக அரசியல் விமர்சனங்கள் எழுகின்றன.
ஒட்டுமொத்தமாக பார்க்கையில், திருமாவளவன் தற்போது ஒரு தர்மசங்கடமான அரசியல் சூழலில் சிக்கியுள்ளார். கொள்கைக்காக திமுகவுடன் நீடிப்பதா அல்லது தனது சமூகத்தின் உரிமைகளுக்காகவும், கட்சி வளர்ச்சிக்காகவும் மாற்று பாதையை தேர்ந்தெடுப்பதா என்ற இக்கட்டான நிலையில் அவர் உள்ளார். 2026 தேர்தலில் திருமாவளவனுக்கு திமுக அளிக்கும் தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் அவர் எடுக்கும் முடிவு, தமிழக தலித் அரசியலின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணியாக அமையும். தனித்து நின்றால் மட்டுமே தனது உண்மையான பலத்தை நிரூபிக்க முடியும் என்ற சூழலில் திருமாவளவன் என்ன செய்யப்போகிறார் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
