பா.ஜ.க. கூட்டணியில் இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விலகிய நிலையில், அவரை மீண்டும் கூட்டணிக்கு அழைக்க பா.ஜ.க. தலைமை முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரதமரை சந்திக்க ஓ.பி.எஸ்.ஸிற்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி மற்றும் நயினார் நாகேந்திரன் ஆகியோர் செய்யும் தவறுகள் அ.தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பை குறைக்கும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
ஓ.பி.எஸ்.ஸின் விலகலும், அடுத்த நகர்வுகளும்
பிரதமர் தமிழகம் வந்தபோது தன்னை சந்திக்க அப்பாயின்மென்ட் தரவில்லை என அவமதிப்பதாக கூறி, ஓ.பி.எஸ். திடீரென தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினார்.
கூட்டணியில் இருந்து விலகிய பிறகு, ஓ.பி.எஸ். இரண்டு முறை முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து பேசியது, தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
“ஓ.பி.எஸ்.ஸை எடப்பாடி பழனிசாமியும் நயினார் நாகேந்திரனும் சாதாரணமாக எடை போட்டுவிட்டனர். தென் மாவட்டங்களில் அவருக்கு உள்ள செல்வாக்கு இன்னும் அவர்களுக்கு புரியவில்லை” என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
ஓபிஎஸ்-க்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த மரியாதையில் 10 சதவீதம் கூட “பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், ஓ.பி.எஸ்.ஸிற்கு கொடுக்கவில்லை என்றும் அதனால் தான் ஓபிஎஸ் மனம் நொந்து போனதாக விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஈ.பி.எஸ். தனது தனிப்பட்ட ஈகோ காரணமாக, ஓ.பி.எஸ்-ஐ கூட்டணியில் சேர்க்காமல், அ.தி.மு.க.வின் தோல்விக்கு வழி வகுப்பதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். 2021ல் செய்த தவறை ஈபிஎஸ் மீண்டும் செய்கிறார் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.
இந்த சூழ்நிலையில்தான், ஓ.பி.எஸ்.ஸின் பலத்தை பா.ஜ.க. தலைமை உணர்ந்துள்ளதாகவும், அவரை சமாதானப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓ.பி.எஸ்.ஸிற்கு மீண்டும் பிரதமரை சந்திக்க வாய்ப்பு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.எனவே, ஓ.பி.எஸ். மீண்டும் பா.ஜ.க. கூட்டணிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஓ.பி.எஸ். கூட்டணியில் இருந்தால் குறைந்தபட்சம் ஒரு சதவீத வாக்குகளாவது கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த சூழலில், ஈ.பி.எஸ். தனது முடிவை மாற்றிக் கொள்வாரா என்பதை பொறுத்துதான் அ.தி.மு.க.வின் எதிர்காலம் அமையும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
