இந்தியன் 2 படத்துக்கு தடை கிடையாது.. மதுரை நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. ஷங்கர் வைத்த அதிரடி வாதம்

By Keerthana

Published:

மதுரை: ‘இந்தியன்- 2’ படத்துக்கு தடையில்லை என்று மதுரை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. மதுரை எச்.எம்.எஸ்.காலனியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது வழக்கில் இயக்குனர் ஷங்கர் தரப்பில் வைக்கப்பட்ட அதிரடி வாதத்தால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

மதுரை எச்.எம்.எஸ்.காலனியை சேர்ந்த ராஜேந்திரன், மதுரை மாவட்ட 4-வது முன்சீப் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில். “ராஜேந்திரன் ஆகிய நான் மதுரையில் கடந்த 55 ஆண்டுகளாக வர்மக்கலை பயிற்சி அளித்து வருகிறேன். கடந்த 1996-ம் ஆண்டு வெளியான ‘இந்தியன்’ சினிமாவுக்காக நடிகர் கமல்ஹாசனுக்கு படப்பிடிப்பு தளத்தில் வர்ம கலைகளை கற்றுக் கொடுத்திருந்தேன்.

பிரபல எழுத்தாளர் சுஜாதா மற்றும் ஷங்கர் ஆகியோர் கதைக்கு தேவையான இடங்களில் வர்மக் கலை சம்பந்தமான சண்டை முறைகளையும், அது தொடர்பான அறிவியல் பூர்வமான விளக்கங்களையும் என்னிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். அவர்களுக்கு வர்மக் கலையை செய்து காட்டினேன். படபிடிப்பின் போது வர்ம சண்டை காட்சிகளை நானே அமைத்து கொடுத்தேன். இதனால் இந்தியன் படத்தின் டைட்டில் கார்டில் எனது பெயர் சேர்க்கப்பட்டிருந்தது.

‘இந்தியன்’ படத்தில் வர்மக்கலை சண்டைக் காட்சிகளில் நான் பயன்படுத்திய முத்திரைகள் அனைத்தும், எனது ‘தொடு வர்மம் 96’ என்ற புத்தகத்தில் இடம் பெற்ற முத்திரைகளை பயன்படுத்தி காட்சி உள்ளாரகள். இதற்கு முன்பு வர்ம முத்திரை படங்கள் வேறு எந்த புத்தகத்திலும் வந்தது கிடையாது..

இந்நிலையில் ‘இந்தியன் – 2’ படத்தின் போஸ்டர்களில் நான் ஏற்கெனவே சொல்லி கொடுத்த முத்திரை பயன்படுத்தி உள்ளார்கள். என் அனுமதி இல்லாமல் இந்தியன்-2 படத்தில் வர்மக் கலை முத்திரையை பயன்படுத்தி இருக்கிறார்கள். அதற்கு என்னிடம் அனுமதி பெற வேண்டும். என் பெயரை டைட்டில் கார்டில் சேர்க்க வேண்டும் என படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பினேன். ஆனால் பதில் இல்லை.. எனவே, எனது கோரிக்கை நிறைவேறும் வரை ‘இந்தியன் – 2’ படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி செல்வ மகேஸ்வரி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. இயக்குநர் ஷங்கர் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், “வர்மக் கலை உலகளாவிய கலை. அதற்கு குறிப்பிட்ட நபர் யாரும் உரிமை கோர முடியாது என்றார். ‘இந்தியன்-2’ படத்தை நாங்கள் வர்மக்கலையை தழுவி எடுக்கவில்லை. ஊழலுக்கு எதிரான சினிமாவாக தயாராகி உள்ளது. இந்தியன்-2 படத்துக்கு தடை கோர மனுதாரருக்கு எந்த அதிகாரம் இல்லை. இந்த படத்தின் டிக்கெட் உலகம் முழுவதும் விற்கப்பட்டிருக்கிறது.

தயாரிப்பு நிறுவனம் தரப்பில்,“மனுதாரர் ராஜேந்திரனுக்கும், ‘இந்தியன்-2’ படத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. சினிமா தொடர்பான வணிக பிரச்சினை குறித்து இந்த நீதிமன்றம் விசாரிக்க முடியாது” என்றார. இதையடுத்து ‘இந்தியன்-2’ படத்தை வெளியிட தடை இல்லை. இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதி செல்வ மகேஸ்வரி உத்தரவிட்டார்.