அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அற்புதமான செய்தி.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

By Keerthana

Published:

சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், முதுநிலை தலைமை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும் தேதியை பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு நடத்துவது வழக்கம். காலியிடங்கள் தேவைகளை பொறுத்து பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொண்டு விரும்பிய மாவட்டத்திற்கு பணிக்கு போகலாம்.

2024-25ஆம் கல்வியாண்டில் பணியிட மாறுதல் கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு கல்வியாண்டில் ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க, தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களில், 18 ஆயிரத்து 920 விண்ணப்பங்கள் இடைநிலை ஆசிரியர் மாறுதலுக்கும், 9 ஆயிரத்து 295 விண்ணப்பங்கள் பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கும், 5 ஆயிரத்து 814 விண்ணப்பங்கள் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மாறுதலுக்கும், 1,640 விண்ணப்பங்கள் நடுநிலை பள்ளி தலைமையாசிரியர் மாறுதலுக்கும் என மொத்தம் 35 ஆயிரத்து 669 விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டிருக்கிறது.

பள்ளிக்கல்வித்துறை நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில், 25 ஆயிரத்து 711 விண்ணப்பங்கள் பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கும், 17 ஆயிரத்து 296 விண்ணப்பங்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மாறுதலுக்கும், 1,186 விண்ணப்பங்கள் உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் மாறுதலுக்கும், 1,452 விண்ணப்பங்கள் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் மாறுதலுக்கும், 176 விண்ணப்பங்கள் உடற்கல்வி இயக்குனர் மாறுதலுக்கும், 989 விண்ணப்பங்கள் இடைநிலை, இதர ஆசிரியர் மாறுதலுக்கும் என மொத்தம் 46 ஆயிரத்து 810 விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டிருக்கிறது.

தொடக்கக் கல்வி இயக்ககம் மற்றும் பள்ளிக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களிலிருந்து ஆக மொத்தம் 82,479 விண்ணப்பங்கள் பதிவிடப்பட்டு இருக்கிறது. தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களில் இருந்து 16,183 விண்ணப்பங்கள் ஒன்றியத்திற்குள் மாறுதலுக்கும் 6,448 விண்ணப்பங்கள் கல்வி மாவட்டத்திற்குள் மாறுதலுக்கும் 6,185 விண்ணப்பங்கள் மாவட்டத்திற்குள் மாறுதலுக்கும் 6,853 விண்ணப்பங்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கும் விண்ணப்பம் வந்துள்ளது.

பள்ளிக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் பணிபுரியும் ஆசிரியர்களில் இருந்து 27,750 விண்ணப்பங்கள், மாவட்டத்திற்குள் மாறுதலுக்கும் 19,060 விண்ணப்பங்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதலுக்கும் விண்ணப்பித்துள்ளார்கள்,

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்விற்கான கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பின் படி, ” கலந்தாய்வுக்க விண்ணப்பம் செய்த ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியல் ஜூலை மூன்றாம் தேதி வெளியிடப்படும். முன்னுரிமை பட்டியலில் திருத்தம் இருந்தால் ஜூலை 4 மற்றும் 5 ம் தேதிகளில் திருத்தம் செய்யலாம். இறுதி முன்னுரிமை பட்டியல் 6ம் தேதி வெளியிடப்படும். 2024-25ம் கல்வியாண்டிற்கு பொது மாறுதல் கலந்தாய்வு காலை 9.30 முதல் மாலை 6‌ மணி வரை நடைபெறும்.

அரசு, நகராட்சி உயர்,மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கலையாசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள் , இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு பட்டதாரி ஆசிரியர்கள் (IEDSS) மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்)‌ஜூலை 8 ந் தேதி நடைபெறும். அரசு,நகராட்சி உயர்,மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் கலையாசிரியர்கள், இசை ஆசிரியர்கள், தையல் ஆசிரியர்கள் , இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு பட்டதாரி ஆசிரியர்கள் (IEDSS) மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) ஜூலை 9 ந் தேதி நடைபெறும்.

அரசு,நகராட்சிப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்) ஜூலை 10 ந் தேதியும், அரசு,நகராட்சிப் பள்ளிப் பட்டதாரி ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) ஜூலை 11 ந் தேதி முதல் 20 ந் தேதி வரை நடைபெறும்.

அரசு, நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்) ஜூலை 22 ந் தேதியும், அரசு ,நகராட்சி உயர்நிலைப் பள்ளித் தலைம ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) ஜூலை 23 ந் தேதியும், அரசு,நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (வருவாய் மாவட்டத்திற்குள்) ஜூலை 24 ந் தேதியும், அரசு,நகராட்சி மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மாறுதல் (மாவட்டம் விட்டு மாவட்டம்) ஜூலை 25 ந் தேதி நடைபெறும்.

அரசு,நகராட்சி முதுகலை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் நிலை-1, தொழிற்கல்வி ஆசிரியர்கள் (Agriculture) (வருவாய் மாவட்டத்திற்குள்) ஜூலை 27 ந் தேதியும், அரசு,நகராட்சி முதுகலை ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் நிலை-1, தொழிற்கல்வி ஆசிரியர்கள் (Agriculture) (மாவட்டம் விட்டு மாவட்டம்) ஜூலை 27 ந் தேதி முதல் 31 ந் தேதி வரை நடைபெறும் ” இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி கூறியுள்ளார்.