சென்னை-நாகர்கோவில், மதுரை- பெங்களூர் வந்தே பாரத் ரயில்கள் நேர அட்டவணை, முழு விவரம்

By Keerthana

Published:

சென்னை: நாகர்கோவில்-சென்னை எழும்பூர் மற்றும் மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிய வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில்களை பிரதமர் மோடி வரும் ஆகஸ்ட் 31-ந் தேதி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைக்க உள்ள நிலையில், ரயில்கள் நேர அட்டவணை வெளியாகி உள்ளது .

தமிழ்நாட்டில் சென்னை சென்டிரலில் இருந்து மைசூரு, சென்டிரலில் இருந்து கோவை, சென்டிரலில் இருந்து விஜயவாடா, எழும்பூரில் இருந்து நெல்லை மற்றும் கோவை-பெங்களூர் என 5 வந்தே பாரத் ரயில்கள் தினமும் இயக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை எழும்பூர்-நாகர்கோவில் மற்றும் மதுரை-பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிதாக வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளது.

இநத 2 வந்தே பாரத் ரெயிலை, பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது’. இதன்படி வருகிற 31-ந் தேதி டெல்லியில் இருந்தவாறு பிரதமர் மோடி இந்த 2 ரெயில்களையும் காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைக்கிறார்.

புதிய வந்தே பாரத் ரெயில் சென்னை எழும்பூரில் இருந்து நாகர்கோவில் வரை மொத்தம் 742 கிலோ மீட்டர் தொலைவை 8 மணி நேரம் 50 நிமிடங்களில் சென்றடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் 11 மணி நேரம் 35 நிமிடங்களும், அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் 11 மணி நேரம் 50 நிமிடங்களும் பயணம் செய்கிறது. ஆனால் வந்தே பாரத் 8 மணி நேரம் 50 நிமிடங்களில் பயணக்கமுடியும் என்பதால் வரவேற்பும் எதிர்பார்ப்பும் அதிகமாக உள்ளது.

புதிய ரயில்கள் நேர அட்டவணையை பார்ப்போம்.

சென்னை நாகர்கோவில் வந்தே பாரத்: எழும்பூர் – நாகர்கோவில் (20627- 20628) இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, நெல்லை ஆகிய 7 இடங்களில் நின்று செல்ல இருக்கிறது. மொத்தம் 16 பெட்டிகள் கொண்டதாக இந்த ரயில் இருக்கும். இதில் 1 எக்ஸிகியூடிவ் கிளாஸ், மீதமுள்ள பெட்டிகள் ஏ.சி. சேர் காராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. புதிய வந்தே பாரத் ரயிலானது சென்னை எழும்பூரில் காலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 1.50 மணியளவில் நாகர்கோவிலை சென்றடைய உள்ளது. மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்கு புறப்படும் இந்த ரயிலானது இரவு 11.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். ஆக ஒரேநாளில் சென்று திரும்பும் வகையில் இயக்கப்பட உள்ளது. புதன்கிழமை தவிர்த்து வாரத்தின் 6 நாட்கள் இந்த ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.

மதுரை பெங்களூர் வந்தே பாரத்: இதேபோல, மதுரையில் இருந்து பெங்களூர் (20671-20672) வரையில் இயக்கப்பட உள்ள புதிய வந்தே பாரத் ரயிலானது மதுரையில் இருந்து காலை 5.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 1 மணிக்கு பெங்களூரு சென்றடையும். திண்டுக்கல், திருச்சி, கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம் ஆகிய 6 நிலையங்களில் இந்த ரெயில் நின்று செல்லும். மறுமார்க்கமாக மதியம் 1.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.54 மணிக்கு மதுரை வந்தடையும். இந்த ரெயில் 8 பெட்டிகளை கொண்டது. இந்த ரெயில் செவ்வாய்க்கிழமை தவிர்த்து வார்த்தின் 6 நாட்கள் இயக்கப்படும்.