கவுண்டமணியை ஏங்க வைத்த அந்த சாவி.. 20 ஆண்டு போராட்டம்.. மீட்கப்பட்ட ரூ.50 கோடி சொத்து

By Keerthana

Published:

சென்னை: கடந்த 20 ஆண்டுகளாக நடத்திய வந்த சட்டப் போராட்டத்துக்கு பின்னர் நடிகர் கவுண்டமணி சென்னை கோடம்பாக்கத்தில் ரூ.50 கோடி சொத்துகளை மீட்டுள்ளார். 1996-ல் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவரிடம் இருந்து 5 கிரவுன்ட் நிலத்தை நடிகர் கவுண்டமணி வாங்கியிருந்தார். அந்த நிலத்தில் வணிக வளாகம் கட்ட ஆசைப்பட்டவர், அந்தநிலத்திற்கு போட்ட ஒப்பந்தததால் மீட்க முடியாமல் தவித்து வந்தார்.. எப்படி மீட்டார் என்பதை பார்ப்போம்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகரான கவுண்டமணி 1996ம் ஆண்டு சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலை பகுதியில் நளினி பாய் என்பவருக்கு சொந்தமான நிலத்தை வாங்கினார். 5 கிரவுன்ட் மற்றும் 454 சதுர அடி அளவுள்ள கொண்ட இந்த இடத்தில் சுமார் 22, 700 சதுர அடி பரப்பளவில் வணிக வளாகம் கட்டி தர பிரபல தனியார் கட்டுமான நிறுவனத்தோடு கவுண்டமணி ஒப்பந்தம் போட்டார். ஒப்பந்தப்படி 15 மாத்தில் இந்த கட்டட பணிகள் முடித்து தந்து ஒப்படைக்க வேண்டும். இதற்காக ரூ. 3.58 கோடி ஒப்ந்ததாரர் கட்டணம் போடப்பட்டு, 1996 முதல் 1999 காலகட்டம் வரை ரூ. 1.4 கோடி கவுண்டமணி தரப்பில் இருந்து செலுத்தப்பட்டது.ஆனால் கடந்த 2003ஆம் ஆண்டு வரை இந்த இடத்தில் கட்டுமான பணிகள் தொடங்கப்படவில்லையாம். இதையடுத்து கடந்த 2003ம் ஆண்ட நடிகர் கவுண்டமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, வழக்கறிஞர் ஆணையரை நியமித்தார். இதையடுத்து நீதிமன்றம் உத்தரவின் பேரில் சம்மந்தப்பட்ட கட்டிடத்தை ஆய்வு செய்த வழக்கறிஞர் ஆணையர் ரூ. 46.51 லட்சத்துக்கு மட்டுமே பணிகள் முடிவடைந்திருப்பதாக அறிக்கையை சமர்பித்தார். இதைத்தொடர்ந்து இந்த அறிக்கையை சுட்டிக்காட்டி, கட்டுமான பணிகள் முழுமையாக முடித்த பின்னர் பணம் தராவிட்டால் அதை கேட்க முடியும். தற்போது முடித்திருக்கும் பணிகளை ஒப்பிடுகையில் ரூ. 63 லட்சம் அதிகமாகவே கட்டுமான நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளதாக கவுண்டமணி தரப்பில் நீதிமன்றத்தில் பதில் அளிக்கப்பட்டது. இதையடுத்து நடிகர கவுண்டமணியிடமிருந்து பெற்ற 5 கிரவுண்ட் நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என கடந்த 2008ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் கட்டுமான நிறுவனம் சார்பில் கடந்த 2021ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு மனுவை விசாரித்த ஆர். சுப்பிரமணியன், ஆர். சக்திவேல் அடங்கிய நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து தீர்ப்பளித்தனர்.. கவுண்டமணியுடம் நிலத்தை ஒப்படைக்க பிரபல நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.

ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்யக்கோரி, கட்டுமான நிறுவனம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றம், கட்டுமான நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து கடந்த மே மாதம் உத்தரவிட்டது. கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக தனது நிலத்தை மீட்க நடிகர் கவுண்டமணி உச்ச நீதிமன்றம் வரை சட்டப்போராட்டம் நடத்திய வந்த நிலையில், இன்று ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்டு, சாவி அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. கவுண்டமணி சட்டப்போராட்டம் நடத்தி மீட்ட நிலத்தின் இன்றைய சந்தை மதிப்பு ரூ.50 கோடி என்று தகவல் வெளியாகி உள்ளது.