சிறுவனுக்கு தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட விவகாரம்.. சென்னையில் பிரபல மருத்துவமனையின் உரிமம் ரத்து

By Keerthana

Published:

 

சென்னை : சிறுவனுக்கு தவறான சிகிச்சையால் கால் அகற்றப்பட்ட விவகாரத்தில் சென்னை ஆதம்பாக்கம் மவுண்ட் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. நேரில் சென்று விசாரணை நடத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் மருத்துவமனையின் அங்கீகாரத்தை ரத்து செய் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை வேளச்சேரி நேரு நகரைச் சேர்ந்த சின்னையா என்பவரின் 11 வயது மகன் ஹரிகிருஷ்ணன், 7-ம் வகுப்பு படித்து வருகிறார். ஹரிகிருஷ்ணனுக்கு இடது கால் விரலில் அடிக்கடி வலி ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த ஏப்ரல் மாதம், சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள மவுண்ட் பன்னோக்கு மருத்துவமனைக்கு மகன் ஹரிகிருஷ்ணனை சின்னையா அழைத்து சென்றுள்ளார். பரிசோதனை செய்த மருத்துவர் சரவணன், சிறுவனின் காலில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்றும், சிகிச்சை அளித்தால் சீராகிவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து, அளிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின்னர், சிறுவனின் காலில் வலி குறையவில்லை. மாறாக, கால் வீக்கம் அடைந்து சில நாட்களில் கால் கருப்பு நிறமாக மாறியிருக்கிறது. காலில் ரத்தம் ஓட்டம் சீராக இல்லாததால் காலை சரி செய்ய முடியாது என்றும் அப்படியே விட்டுவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனவே கால் முட்டியில் இருந்து காலை அகற்றிவிட்டால், உயிருக்கு ஆபத்து இல்லை மருத்துவர் கூறினார்களாம். இதையடுத்து பெற்றோரின் ஒப்புதலை பெற்று, சிறுவனின் கால் அகற்றப்பட்டுள்ளது.

இதையடுத்து, தவறான சிகிச்சையால் தான் மகனின் கால் இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தவறான சிகிச்சை அளித்த மருத்துவர், மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீசில் சின்னையா புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே சின்னையாவின் புகார் தொடர்பாக, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் (டிஎம்எஸ்) மருத்துவர் ஜெ.ராஜமூர்த்தி நேரில் விசாரிக்க உத்தரவிட்டார். இதன்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் கடந்த 19-ம் தேதி மருத்துவமனைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வில் குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது.இதையடுத்து, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குநர் மருத்துவர் ஜெ.ராஜமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் நேற்று மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தனர். பின்னர் மருத்துவமனையின் அங்கீகாரத்தை தற்காலிகமாக ரத்து செய்தனர். தற்போது தற்காலிகமாக புறநோயாளிகளை பார்க்கக்கூடாது. உள்நோயாளிகளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றுமாறு சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

சிறுவனுக்கு ஏற்பட்ட பிரச்சினைக்கு சிகிச்சை ஒன்று உள்ளது. அதனை அவர்கள் அளிக்கவில்லை.. அதேபோல் எந்த சிகிச்சை அளித்தாலும், அதற்கான பின்விளைவுகள் குறித்து பெற்றோரிடம் தெரிவித்திருக்க வேண்டும். அதை, அவர்கள் முழுமையாக தெரிவிக்கவில்லை. மருத்துவமனையில் சில வசதிகளும் இல்லை. மருத்துவமனை தரப்பில் சில தவறுகள் உள்ளன. 15 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் விளக்கம் அளித்து, குறைபாடுகள் அனைத்தையும் சரிசெய்தால், மீண்டும் மருத்துவமனைக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.