
சிவனை நினைத்து அனுஷ்டிக்கும் விரதங்களில் மிக முக்கியமானது மகா சிவராத்திரி ஆகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். இதன் நோன்பு முறைகளை மகா சிவராத்திரி கற்பம் என்னும் சிறிய நூல் விரிவாக எடுத்து சொல்கிறது.
மாதந்தோறும் சிவராத்திரி வருகிறது . சிவராத்திரி மொத்தம் ஐந்து வகைகளைக் கொண்டது. 1. நித்திய சிவராத்திரி 2. மாத சிவராத்திரி 3. பட்ச சிவராத்திரி 4. யோக சிவராத்திரி 5. மகா சிவராத்திரி.
ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவராத்திரி விரதம் இருப்போர் முதல் ஒருநாள் ஒருபொழுது சைவ உணவருந்தி, சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு ஜாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் குளித்து முடித்து, சுவாமி தரிசனம் செய்து, தானம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவாலயங்களில் நடைபெறும் நான்கு ஜாம அபிசேக ஆராதனைகளுக்கு அவரவர் வசதிக்கேற்பப் பொருள்களைக் கொடுத்து உதவலாம்.

இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் மேலும் பல இருக்கின்றது. ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் “சிவராத்திரி” என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று பிராத்தித்தார் இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார்.

அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார். மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசியன்று அமாவாசைக்கு முதல்நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும்.காரிய வெற்றியும் ஏற்படும்.’சிவாய நம’ என்று சிந்தித்திருந்தால் ‘அபாயம்’ நமக்கு ஏற்படாது,’உபாயம்’ நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும்.பொருளாதார நிலையும் உயரும். ஒருநாள் முழுவதும், ஆறு கால பூஜையிலும் சிவனை நினைத்து வழிப்பட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும்.அதனால் தான் “சிவராத்திரி” விரதம் சிறந்த பலனைக் கொடுக்கிறது.

மகத்துவம் நிறைந்த இந்த மகா சிவராத்திரி விரதத்தை முறைப்படி செய்பவர்கள் முக்தியடைவர். மறுப்பிறப்பு கிடையாது , மறுபிறப்பு வேண்டாதவர் இந்த விரதத்தை 24 ஆண்டுகள் செய்து வர வேண்டும். அவ்வாறு முடியாதவர்கள் 12 ஆண்டுகளாவது தொடர்ந்து அனுஷ்டிக்க வேண்டும். இதனால் விரதம் இருப்பவர்கள் முக்தியை அடைவதுடன், அவர்களின் சந்ததியில், வரும் 21 தலைமுறையினருக்கும் பலன் கிடைக்கும். முறையாக வழிபட்டால் முக்தி கிடைக்கும்.
சிவப்பெருமானை உள்ளன்போடு வழிபடுவோம். நற்பலன்களை பெறுவோம்..
ஓம் நமச்சிவாய!!