கார்த்திகை மாதம் வரும் மகாதீப திருநாளை எப்படி கொண்டாடுவதுன்னு பார்க்கலாம்.
இறைவனே ஜோதிசொரூபமாகக் காட்சி தந்த நெருங்க முடியாத அற்புதமான மலை தான் திருவண்ணாமலை. அண்ணுதல் என்றால் நெருங்குதல். அண்ணா என்றால் நெருங்க முடியாத என்று பொருள். நெருங்க முடியாத மலைக்கு நெருப்பு மலை என்று பெயர்.
அதனால்தான் இறைவனுக்கு அண்ணாமலை என்று பெயர். அண்ணாமலை ஆண்டவராக அருணாச்சலேஸ்வரராக நம் எல்லோருக்கும் ஆன்மாவை எல்லாம் பரிபூரணமாகத் தூய்மை செய்ய வேண்டும். நெருப்புக்குள் எதைப் போட்டாலும் அது எப்படி எரித்து சாம்பலாக்குகிறதோ அது போல நம் மனதில் இருக்கக்கூடிய தீய எண்ணங்கள், ஆணவம், கன்மம், மாயை போன்ற மலங்களை எல்லாம் எரித்துச் சாம்பலாக்கிப் பிறவா பெருநிலையைப் பெற்றுத் தருகின்ற பேரருளனாகிய இறைவன் நமக்குக் காட்சி தந்த அந்த அழகான திருநாள் தான் இந்த தீபத் திருநாள்.
அதனால்தான் கார்த்திகை மாதம் வரக்கூடிய இந்த மகாதீபத்திருநாள் சிவ வழிபாட்டுக்குரிய மிக முக்கியமான ஒரு திருநாள். அந்த அற்புதமான நாள் தான் நாளை (3.12.2025) வருகிறது.
லட்சக்கணக்கான பக்தர்கள் இப்போது இருந்தே திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர். அங்கு கிரிவலம், சாமி தரிசனம், பன்னிரு லிங்கங்கள் தரிசனம், சித்தர்கள் சமாதியில் தரிசனம் என பல்வேறு சிறப்புகள் உள்ளன.
இந்த நன்னாளில் வீடுகள் தோறும் திருவண்ணாமலையின் உச்சியில் மகாதீபம் ஏற்றியதும் அகல்விளக்குகள் ஏற்ற ஆரம்பித்து விடுவர். தெருவெங்கும் விளக்குகளின் ஜோதி கண்;கொள்ளாக்காட்சியாக இருக்கும். சிவன் கோவில்களில் எல்லாம் அந்த அடிமுடி காணாத இறைவனின் சிறப்பை எடுத்துக் காட்டும் வகையில் சொக்கப்பனை கொளுத்துவார்கள்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



