நாம் உயிர் வாழ அடிப்படை தேவை என்றால் காற்று, நீர், உணவு தான். அவற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றான இந்த உணவு தான் நம் பசியைப் போக்குகிறது. தினமும் அதற்காகத் தான் மனிதன் உழைக்கிறான்.
அத்தகைய உணவு சில நாள்களில் நமக்குக் கிடைக்காமல் போகும்போது பசி, பட்டினி, பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கண் விழி பிதுங்கி யாராவது உணவு தர மாட்டார்களா என்று ஒரு ஏக்கம் வரும். அந்தக்குறையைப் போக்க வருகிறது அன்னாபிஷேகம். வழிபடும் முறை என்ன? எப்போது வருகிறதுன்னு பார்க்கலாமா…
சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அன்றைய நாளில் சிவனைத் தரிசித்தால் பெரும் பாக்கியம் கிடைக்கும். 2025 நவம்பர் 5ம் தேதி புதன்கிழமை பௌர்ணமி நாளில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறும்.
பௌர்ணமி திதி நவம்பர் 4ம் தேதி இரவு 9.43 மணிக்கு தொடங்கி 5ம் தேதி இரவு 7.27 மணி வரை உள்ளது. மேலும் இந்த வருடம் பரணி நட்சத்திரத்தில் அன்னாபிஷேகம் நடப்பது மிகவும் விசேஷமானது. இந்த நாளில் சிவனை தரிசிப்பது கோடி லிங்கம் தரிசித்த புண்ணியத்தைத் தரும்.
தலைமுறைக்கே அன்னதோஷம் விலகும். உணவு பஞ்சம் வராது என்பது ஐதீகம். அன்றைய தினம் சிவன் கோவிலுக்குச் சென்று அரிசி தானம் செய்வது கோடி புண்ணியத்தைப் பெற்றுத் தரும். சிவனுக்கு சாற்றப்பட்ட அன்னத்தைப் பிரசாதமாக உண்பது பெரும் பாக்கியம்.
நாம் அன்றைய தினத்தில் சிவன் கோவிலுக்குச் சென்று அரிசி, பருப்பு, காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகிய அபிஷேகத்துக்கு தேவையான பொருள்களில் ஏதாவது ஒன்றை வாங்கிக் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்தால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
சாப்பாட்டுக்கு நமக்கு எப்பவுமே பஞ்சம் என்ற சூழ்நிலை வராது. அன்னாபிஷேகம் செய்த பிறகு அந்த பிரசாதத்தை வாங்கி சாப்பிடுவதால் நோய்கள் தீரும். கல்வித்திறன் மேம்படும் என்பது ஐதீகம்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



