கோவிலுக்கு சென்று இறைவனை தரிசித்து வழிபட்ட பிறகு, இறைனின் சன்னதியை வலம் வருவது வழக்கம். பெரும்பாலானவர்கள் நேரமில்லை என சொல்லி இறைவனை மட்டும் தரிசனம் செய்து விட்டு வெளியே சென்று விடுவார்கள். ஆனால் கோவிலை வலம் வருவது மிக முக்கியமானதாகும்.
அப்படி வலம் வரும் போது, மனதார இறைவனை நினைத்தபடி வலம் வந்தால் மனதில் உள்ள தீய எண்ணங்கள் நீங்கி, இறைவனிடம் இருந்து வெளிப்படும் நேர்மறை ஆற்றல்களால் நம்முடைய மனது சுத்தமாகும். நேர்மறையான ஆற்றல்கள் பெருவதால் நன்மைகள் அதிகம் நடக்கும்.
கோவில்களை வலம் வரும் போது ஒற்றை படை எண்ணிக்கையில் தான் வலம் வர வேண்டும். ஒவ்வொரு தெய்வத்தையும் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் வலம் வந்து வழிபட வேண்டும் என சொல்லப்படுகிறது. இதற்கு ஏற்றாற் போல் பலன்களும் மாறுபடும்.
விநாயகர் கோவில் – ஒரு முறை வலம் வந்து வழிபட வேண்டும். இதனால் தடைகள் விலகும். முருகன் கோவில் – 6 முறை வலம் வர வேண்டும். இதனால் எதிரிகள் தொல்லை நீங்கி, ஞானம் பெருகும்.
அம்மன் கோவில் – 5 முறை வலம் வர வேண்டும். இதனால் வெற்றி, மனஅமைதி கிடைக்கும். வெள்ளிக்கிழமை துவங்கி, செவ்வாய்கிழமை வரை தினமும் அம்பிகையின் கோவிலுக்கு சென்று 5 முறை வலம் வந்தால் நினைத்த காரியம் நிச்சயம் நடக்கும் என்பது நம்பிக்கை.
சிவன் கோவில் – 5 முறை வலம் வந்தால் நினைத்தது நடக்கும். செல்வ வளம் பெருகும், பிறவா நிலை ஏற்படும். பெருமாள் கோவில் – 3 முறை வலம் வர வேண்டும். இதனால் ஆட்சி அதிகாரம், செல்வாக்கு, அஷ்டலட்சுமி கடாட்சம் ஆகியவை கிடைக்கும். நவகிரகங்கள் – ஒன்பது முறை வலம் வருவதால் ஜாதகங்களில் இருக்கும் குறைகள் நீங்கும்.
இப்படி எந்த தெய்வத்தின் கோவிலுக்கு சென்று எத்தனை முறை வலம் வர வேண்டும் என தெரியாதவர்கள், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள முடியாதவர்கள் பொதுவாக எந்த கோவிலுக்கு சென்றாலும் எத்தனை முறை வலம் வந்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதையும் தெரிந்து கொள்வோம்.
வலம் வரும் எண்ணிக்கையும், பலன்களும் : 1 முறை – இறைவனிடம் நெருங்க செய்யும். 3 முறை – மனச்சுமை குறையும். 5 முறை – விருப்பங்கள் நிறைவேறும். 7 முறை – காரிய வெற்றி. 9 முறை – எதிரிகள் தொல்லை நீங்கும். 11 முறை – ஆயுள் விருத்தி. 13 முறை – பிரார்த்தனை நிறைவேறும். 15 முறை – செல்வம் பெருகும். 17 முறை – தானிய வளம் பெருகும். 19 முறை – நோய் தீரும். 21 முறை – கல்வி வளர்ச்சி. 27 முறை – குழந்தை பாக்கியம். 108 முறை – சகல நலன்களும் கிடைக்கும்
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.


