காணும் பொங்கல் (17.1.2026) என்பது தை 3வது நாளில் வரக்கூடியது. இது நிறைவாக வரக்கூடியது. கன்னிப் பெண்களுக்கு வைக்கக்கூடியதுதான் காணும் பொங்கல். இந்த நாளில் முன்னர் ஒரு பழக்கம் இருந்தது. ஒருவரை ஒருவர் பார்த்து தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் நாள். சுற்றுலாத்தலங்களுக்குச் சென்று தங்கள் உறவு, நட்புகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். பீச், பார்க், தியேட்டர் எல்லாம் அன்று களை கட்டும்.
அப்படி பகிர்ந்து கொள்ளும் நாள் மட்டும் காணும் பொங்கல் அல்ல. ஆனால் அதையும் தாண்டி நாம நல்லாருக்கணும்னு நினைக்கிற குருமார்களுக்கும், பெரியோர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நாள் இதுதான். உங்களுக்குப் பாடம் எடுத்த வாத்தியாரும் குரு தான். அல்லது யாருடைய வாழ்க்கையை நீங்கள் கடைபிடித்து வாழ்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு குருமார்கள். ஆசிரியர்கள், பல கலைகளைக் கற்றுத் தருபவர்கள் எல்லாரும் குருமார்கள் தான். இவர்களை வணங்கி அவர்களுக்குப் பரிசு கொடுக்கலாம்.
அல்லது நாம நல்லாருக்கணும்னு நினைக்கிற பெரியவர்களுக்குப் பரிசு கொடுத்து அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கலாம். அதனால் இந்த நாளில் மாணவர்கள் குருமார்களிடம் சின்ன பரிசு கொடுத்து ஆசிர்வாதம் வாங்கலாம். ஆனால் இன்று சின்னவர்கள் பெரியவர்களிடம் காசு வசூல் பண்ற பழக்கமாக மாறிவிட்டது.
பெரியவங்க அன்பா கொடுத்தா அவங்களுக்கும் நாம ஏதாவது கொடுக்கணும். அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க. வயதான அப்பா, அம்மாவுக்குப் பரிசு வாங்கிக் கொடுக்கும்போது அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க. அதனால இந்த நாளில் பரிசு கொடுத்து கண்டு நாம் பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெறும் நாள். இதுதான் காணும் பொங்கல். மேற்கண்ட தகவலை பிரபல ஆன்மிக சொற்பொழிவாளர் தேச மங்கையர்க்கரசி பகிர்ந்துள்ளார்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



