வயநாட்டில் ஓர் அத்திப்பட்டி.. வரைபடத்திலிருந்தே காணாமல் போன கிராமம்..

By John A

Published:

இயற்கை தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ள அவ்வப்போது தனது கோரமுகத்தைக் காட்டி விடுகிறது. இதனால் மழை, வெள்ளம், புயல், நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு, சுனாமி என பஞ்ச பூதங்களிலும் இயற்கைப் பேரழிவுகளில் சிக்கி பல லட்சக் கணக்கான உயிர்கள் பலியாகின்றன. வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு இயற்கைப் பேரழிவில் சிக்கி இதுவரை சுமார் 400-க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் பல ஆயிரக்கணக்கானோர் வீடுகள் இன்றி, சொந்தங்களை இழந்து, உடமைகளை இழந்து நிர்கதியாய் உள்ளனர்.

மத்திய, மாநில அரசுகளும், சமூக அமைப்புகளும் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றது. மிகவும் பாதிப்புக்குள்ளான சூரல்மலை, முண்டக்கை போன்ற பகுதிகளில் மீட்புப் பணிகள் இன்னமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நிலச்சரிவு பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள ஒரு கிராமமே உருத்தெரியாமல் அழிந்துள்ளது என்றால் அதிர்ச்சியாக இருக்கிறதா?

தகுதி நீக்கம் செய்யப்பட்ட வினேஷ் போகத்.. தகர்ந்த ஒலிம்பிக் பதக்க கனவு

சிட்டிசன் படத்தில் வரும் அத்திபட்டி என்னும் கிராமம் வயநாட்டின் இயற்கை அழகில் ஓரமாக ஒளிந்திருந்த ஓர் அழகிய கிராமம் தான் பூஞ்சேரி மட்டம். நிலச்சரிவு இங்குதான் ஆரம்பமாகியிருக்கிறது. நூற்றுக்கணக்கான வீடுகள் நிறைந்திருந்த பூஞ்சேரி மட்டம் கிராமம் இன்று பெயருக்குக் கூட ஒரு கட்டிடம் கூட இல்லை.

அனைத்தும் நிலச்சரிவில் மண்ணோடு மண்ணாகப் புதைந்து விட்டது. மேலும் பலர் இறந்துவிட்டனர். இப்படி கடும் பாதிப்புக்கு உள்ளான பூஞ்சேரி மட்டம் கிராமம் இன்று மனிதர்கள் வாழத் தகுதியற்ற ஒரு கிராமமாக அறிவிக்கப்பட்டது. மேலும் வரைபடத்திலிருந்து அந்த கிராமமே இப்போது கிடையாது.

திரைப்படத்தில் கற்பனைக்காக எழுதப்பட்ட காட்சி ஒன்று இன்று நம் கண்முன்னே கொடூரமாக அரங்கேறியிருக்கிறது. வயநாடு கோரக் காட்சிகளும் காண்போரைக் கண்கலங்க வைப்பதாக உள்ளது.