மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதிய ஆதார் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். இது, முழுமையாக டிஜிட்டல் வடிவத்தில், மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன், ஆவணங்கள் இல்லாமல் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவின் மூலம் இந்த செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார். இதில், புதிய செயலி ஆதாரை பயன்படுத்தும் முறையில் புரட்சியை கொண்டு வரக்கூடியது என்றும், பயனாளர்கள் தங்களின் தகவல்களில் முழுமையான கட்டுப்பாட்டை பெறக்கூடியது என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது பீட்டா நிலையில் உள்ள இந்த செயலி, பயனாளர்கள் தங்களது ஆதார் விவரங்களை பாதுகாப்பாகவும், டிஜிட்டலாகவும் பகிர அனுமதிக்கிறது. இதில், Face ID மற்றும் பயனர் ஒப்புதல் என்ற இரண்டு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இவை இரண்டும் இருந்தால் மட்டுமே டவுன்லோட் செய்ய முடியும் என்பதால் வேறொருவர் நம்முடைய ஆதாரை வைத்து Fraud செய்ய முடியாது. பயனர்களின் தனியுரிமை முழுமையாக அவர்களுடைய கையில் இருக்கும்.
அதேபோல் இந்த புதிய செயலி, ஹோட்டல்கள், கடைகள் அல்லது பயணங்களின் போது ஆதார் நகல்கள் வழங்கும் பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இனி பயனாளர்கள், தங்களது ஆதார் விவரங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதற்கோ, கசிய்வதற்கோ அஞ்ச வேண்டிய அவசியமில்லை. பயனர் ஒப்புதல் இல்லாமல் எந்த தகவலும் பகிரப்படாது என அரசு உறுதியளிக்கிறது.
இந்த புதிய செயலியின் முக்கிய அம்சங்கள் இதோ:
* Face ID அங்கீகாரத்தின் மூலம் அடையாள உறுதி
* ஆதார் அட்டைகள் அல்லது நகல்களின் தேவையில்லை
* QR குறியீடு மூலம் உடனடி சரிபார்ப்பு
* பயனர் ஒப்புதலுடன் மட்டுமே தகவல் பகிர்வு
* தவறான பயன்பாடுகள், போலி ஆதார் அட்டைகளைத் தடுக்கும் பாதுகாப்பு
* முழுமையாக டிஜிட்டல் மற்றும் பாதுகாப்பானது
அமைச்சர் மேலும் கூறினார், “புதிய ஆதார் செயலி பயனாளர்களின் அதிகபட்ச தனியுரிமையையும், பாதுகாப்பையும் வழங்கும். இது போட்டோஷாப் மூலம் போலியான ஆதார் அட்டை தயார் செய்வதை தடுக்கும். மேலும் ஆதார் டேட்டாக்கள் கசியும் சாத்தியக்கூறுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும்.