ஈஷாவில் மஹாசிவராத்திரி விழா நேற்று (15/02/2025) வெகு விமரிசையாக நடைபெற்றது. சத்குரு முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சிறப்பு உட்பட பல முக்கியப் பிரமுகர்கள் விருந்தினர்களாக கலந்து கொண்டார்.
ஈஷா மஹாசிவராத்திரி விழா தியானலிங்கத்தில் சத்குரு வழிநடத்திய ‘பஞ்ச பூத க்ரியாவுடன்’ தொடங்கியது. முன்னதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தியானலிங்கம், லிங்கபைரவி சன்னதிகளில் தரிசனம் செய்தார்.
இவ்விழாவில் சத்குரு பேசுகையில், “யோகாவின் முழு முயற்சியும், எனது முயற்சியும், ஆதியோகியின் ஆயிரக்கணக்கான ஆண்டுகால முயற்சியும், மக்கள் யாரும் தங்களுக்குத் தாங்களே ஒரு தடையாக இருக்க கூடிய ஒரு பேரழிவாக மாறிவிடக்கூடாது என்பதே.
இந்த உலகில் நீங்கள் எவ்வளவு அதிகமாகச் செய்கிறீர்களோ, அவ்வளவு தடைகளை சந்திப்பீர்கள். ஆனால் மிக முக்கியமான விஷயம், உங்கள் சொந்த வாழ்க்கையில் நீங்கள் ஒரு தடையாக இருக்கக்கூடாது. உங்கள் சொந்த மனம், எண்ணம், உணர்ச்சி மற்றும் ஆற்றல்கள் உங்களுக்கே ஒரு தடையாக மாறாமல் இருப்பதை ஒவ்வொருவரும் உறுதி செய்ய வேண்டும். இதை எளிதாக்குவதுதான் யோகக் கலை.
மனித உடலே ஒரு அதிநவீன வேதியியல் தொழிற்சாலை போன்றது. உங்கள் உடலினை நிர்வாகம் செய்யும் ஒரு சிறந்த சி.இ.ஓ-வாக நீங்கள் இருந்தால், பேரின்பத்தின் வேதிப்பொருட்களை உற்பத்தி செய்வீர்கள். நீங்கள் ஒரு மோசமான நிர்வாகியாக இருந்தால், கவலை, மன அழுத்தம், முட்டாள்தனம் ஆகிய தேவையில்லாத விஷயங்களை உற்பத்தி செய்வீர்கள். இதைச் சரிசெய்யவே ஆதியோகி வந்தார், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, அவர் 112 முறைகளை வழங்கினார். அதன் மூலம் ஒரு மனிதன் தனது உயர்ந்த சாத்தியத்தை அடைய முடியும்.
ஆதியோகி கடந்த காலத்தைச் சேர்ந்தவர் அல்ல. அவர் எதிர்காலத்தைச் சார்ந்தவர். ஏனெனில் அவர் வழங்கியது வெறும் நம்பிக்கைகளோ, தத்துவங்களோ, கோட்பாடுகளோ அல்லது போதனைகளோ அல்ல. அவை மனித நல்வாழ்விற்கான தொழில்நுட்பங்கள். வரலாற்றில் முதல் முறையாக, சொர்க்கத்தின் மீதான நம்பிக்கையை விட தொழில்நுட்பத்தின் மீதான நமது நம்பிக்கை அதிகரித்துள்ளது. எனவே, ஆதியோகி வருங்கால தலைமுறைக்கு உரியவர்.
மேல்நோக்கிப் பார்க்காமல், உள்நோக்கிப் பார்ப்பதுதான் ஒரே வழி. இது மதத்திலிருந்து பொறுப்புணர்வை நோக்கிய ஒரு பயணம். மதம் என்பது துரதிர்ஷ்டவசமாக பொறுப்புகள் எங்கோ மேலே இருப்பதாக மக்களை நம்ப வைக்கிறது. ஆனால், நமது கலாச்சாரம் எப்போதும் ‘கர்மா’ பற்றியே பேசுகிறது.
கர்மா என்றால் ‘நமது செயல்’ அல்லது ‘நமது உருவாக்கம்’ என்று பொருள். உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பது உங்கள் கையில்தான் உள்ளது. நீங்கள் உங்களை எப்படிச் செதுக்கிக் கொள்கிறீர்கள் என்பதே உங்கள் வெற்றி. இந்த உண்மையை உலகுக்கு உணர்த்தியவர் ஆதியோகி.” எனக் கூறினார்.
‘பவ்ய பாரத் பூஷண்’ விருதுகள்
ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் இந்தாண்டு முதல் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த சாதனையாளர்களை அங்கீகரிக்கும் வகையில் பவ்ய பாரத் பூஷண் என்ற பெயரில் விருதுகள் வழங்கப்படும் என சத்குரு அறிவித்தார்.
அந்த வகையில் இந்தாண்டு விருதுகள் வயலின் கலைஞர் டாக்டர் என்.ராஜம், பரதநாட்டிய கலைஞர் அலர்மேல்வள்ளி, விண்வெளி விஞ்ஞானிகள் நம்பி நாராயணன், கிரண் குமார், வரலாற்றாசிரியர் விக்ரம் சம்பத், பேட்மிட்டன் வீராங்கனை பி. வி. சிந்து, ஆப்ரேஷன் சிந்தூரில் பங்காற்றிய ராணுவ வீரர்களை அங்கீகரிக்கும் வகையில் ஏர் மார்ஷல் ஜித்தேந்திர மிஷ்ரா, கடற்படை தலைமை அதிகாரி ராகுல் விலாஸ், ராணுவ அதிகாரி ராத்தே உள்ளிட்டோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஆதியோகி திருவுருவம் பதித்த விருது பதக்கங்களை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்கினார்.
இவ்விழாவில் ராஜ்நாத் சிங் பேசுகையில், “நான் காசியில் இருந்து வருகிறேன். காசிக்கும் தமிழ்நாட்டுக்கும் இருக்கும் தொடர்பு மிகவும் பழமையானது. காசி உலகின் மிகப் பழமையான நகரங்களில் ஒன்று என்றால், தமிழ் பண்பாடோ உலகின் மிகப் பழமையானது. மொழி, பண்பாடு, சமையல் கலை போன்ற பற்பல அம்சங்களில் தமிழ்நாடு நம் வரலாற்றில் வளமான இடத்தை வகிக்கிறது.
சத்குருவின் வழிகாட்டுதலில் ஈஷாவில் நிகழும் மஹாசிவராத்திரி விழா இன்று சர்வதேச அளவிலான ஆன்மீக கொண்டாட்டமாகவும், பாரத தேசத்தின் பண்பாட்டு மறுமலர்ச்சியின் புதிய பிரகடனமாகவும் விளங்குகிறது.
பாதுகாப்பு என்பது வெறும் வெளிச்சக்திகள் சார்ந்தது மட்டுமல்ல, அது வலிமைமிக்க தேசிய உணர்விலிருந்து வருவது. அச்சம் இல்லாத சமுதாயத்தால் தான் வலிமையான தேசத்தை உருவாக்க முடியும். இந்த அச்சமின்மை ஆன்மீக அடிப்படையில் இருந்துதான் வரும். பாதுகாப்புக்கும் அழிவுக்கும் அடையாளமாக விளங்கும் சிவபெருமானைப் போலவே, நம்முடைய படை வீரர்களும் தங்களுக்குள் அச்சமற்ற தன்மையையும், பொறுமையையும் கொண்டு தேசத்தைக் காக்கிறார்கள்.
மனித குலம் மன அழுத்தத்துக்கும் பதட்டத்துக்கும் ஆளாகிற இந்த காலத்தில் சிவபெருமானின் சாரம் முக்கியத்துவம் பெறுகிறது. எவ்வளவோ இரைச்சல்களுக்கு நடுவிலும் எப்படி சமத்தன்மையோடு இருப்பது என்பதற்கான அடையாளமே சிவபெருமான். இந்த சாரத்தை சத்குரு மனித குலத்திற்கு முன் கொண்டு வந்து, ஆன்மிகத்தை ஒரு விஞ்ஞானமாக முன் வைக்கிறார். ஈஷா அறக்கட்டளை இன்னர் இன்ஜினியரிங் போன்ற முன்னெடுப்புகள் மூலம் நவீன முறையில் மக்களிடம் ஆன்மீகத்தை கொண்டு சேர்க்கிறது.
ஈஷா ஹோம் ஸ்கூல் குழந்தைகளை சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. ஆன்மீகத்திலும் விஞ்ஞானத்திலும் இளம் இதயங்களை ஈஷா எப்படி வடிவமைக்கிறது என்பதை பார்த்து மிகவும் மகிழ்ந்தேன்.” எனக் கூறினார்.
தொடர்ந்து இரவு முழுவதும் நடைபெற விழாவில் சத்குரு வழிநடத்திய சக்திவாய்ந்த தியானங்கள், மந்திர உச்சாடனைகள், யோகேஷ்வர லிங்க மஹா அபிஷேகம் மற்றும் தலைசிறந்த கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற உள்ளன.
இவ்விழாவில் பங்கேற்கும் மக்கள் இரவு முழுவதும் விழிப்பாக இருக்க உதவும் வகையில் ராப் இசைக்கலைஞர் பிளேஸ், குஜராத் நாட்டுப்புறக் கலைஞர் ஆதித்யா காத்வி, தபேலா இசைக் கலைஞர் பிரசாந்த் சோனாக்ரா, ராஜஸ்தான் நாட்டுப்புறக் கலைஞர் ஸ்வரூப் கான், ராப் இசைக்கலைஞர் பாரடாக்ஸ் மற்றும் சவுண்டஸ் ஆப் ஈஷா குழு ஆகியோர் இசை நிகழ்ச்சிகளை வழங்கினர்.
இதனுடன் ‘புராஜக்ட் சம்ஸ்கிருதி’ குழுவின் சிறப்பு நாட்டிய நிகழ்ச்சியும், ஈஷா சம்ஸ்கிருதி பள்ளி மாணவர்களின் தேவார பண்ணிசை மற்றும் களரிப்பயட்டு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
சிறப்பு விருந்தினர்கள்
இவ்விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் அமைச்சர் எஸ்,பி. வேலுமணி, பிரமேலதா விஜயகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடேஷ் பிரசாத், துரந்தர் பட நடிகை சாரா, கேஜிஎப் ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் லட்சக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் மஹாஅன்னதானம் வழங்கப்பட்டது.

