இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகள் மற்றும் உலகளாவிய வர்த்தக ஒப்பந்தங்களின் நிலைப்பாடு குறித்து, மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த கருத்துகள் தற்போது பேசுபொருளாகியுள்ளன. இந்தியா எந்தவொரு ஒப்பந்தத்தையும் அவசரமாகவோ, கெடுபிடிகள் மூலமாகவோ அல்லது நிர்ப்பந்தத்தின் மூலமாகவோ ஏற்காது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளுக்கிடையே வர்த்தக ஒப்பந்தங்கள் பெரும்பாலும் “இப்போதே கையெழுத்திடுங்கள் அல்லது வெளியேறுங்கள்” என்ற கெடுபிடிகளுடன் நடைபெறும்போது, இந்தியாவின் அணுகுமுறை மாறுபட்டதாக உள்ளது.
“நாங்கள் அவசரமாக ஒப்பந்தங்களை செய்வதில்லை. குறிப்பாக, எங்கள் தலையில் துப்பாக்கியை வைத்து கொண்டு அல்லது கெடுபிடிகளை வைத்து கொண்டு பேரம் பேச மாட்டோம்,” என்று அமைச்சர் பியூஷ் கோயல் உறுதிபட தெரிவித்தார்.
இந்தியா நீண்ட கால இலக்குகளை மட்டுமே கருத்தில் கொள்கிறது. அடுத்த 20-25 ஆண்டுகளில் இந்தியா 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறும் என்பதை அங்கீகரித்து, அதன் எதிர்கால வளர்ச்சிக்கு உகந்த ஒப்பந்தங்களை மட்டுமே நாடு கோரும்.
மிகக் குறுகிய கால நலன்களை அதாவது அடுத்த 6 மாதங்களில் அமெரிக்காவுக்கு இரும்பை விற்பது அல்லது அடுத்த 2-3 ஆண்டுகளுக்கு இந்தியாவுக்கு வாகனங்களை விற்பது போல மட்டும் கருத்தில் கொண்டு வர்த்தக ஒப்பந்தங்களை முடிக்க இந்தியா விரும்பவில்லை.
அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் விதிக்கும் அரசியல் அழுத்தங்கள் குறித்தும், இந்தியா தனது வெளியுறவுக் கொள்கையில் உறுதியாக நிற்பதையும் அமைச்சர் பியூஷ் கோயல் தெளிவுபடுத்தினார்.
“நாங்கள் யாருடன் நட்பு கொள்ள வேண்டும் என்று வேறு எந்த கருத்தின் அடிப்படையிலும் இந்தியா முடிவு செய்யாது. தேசிய நலன் மட்டுமே எங்கள் முடிவுகளுக்கு அடிப்படையாக இருக்கும். நாங்கள் ரஷ்யாவுடன் நட்பு வைத்திருக்கக் கூடாது என்று யாராவது சொன்னால், அல்லது நாளை ஒரு நாள் நீங்கள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் நட்பு கொள்ளக் கூடாது என்று யாராவது சொன்னால், அதை நாங்கள் ஏற்க மாட்டோம்,” என்று அமைச்சர் பியூஷ் கோயல் அடித்து கூறினார்.
ரஷ்யாவின் சில துணை நிறுவனங்கள் மீதான அமெரிக்க தடைகள் குறித்து ஜெர்மனி கூட விதிவிலக்கு கோருவதை சுட்டிக்காட்டிய அவர், இந்தியா மட்டும் ஏன் தனிமைப்படுத்தப்படுகிறது என்றும் கேள்வி எழுப்பினார். வர்த்தக தடைகள் மற்றும் வரிகள் விதிக்கப்பட்டால், அதை எதிர்கொள்ளும் திறன் இந்தியாவுக்கு இருப்பதாக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
ஒருவேளை எங்கள் மீது வரிகள் விதிக்கப்பட்டால், அதை நாங்கள் ஏற்றுக்கொண்டு அதிலிருந்து எப்படி மீண்டு வருவது, புதிய சந்தைகளை எப்படி அடைவது என்று சிந்திப்போம். இந்தியா ஒரு நெகிழ்ச்சியான கட்டமைப்பை கொண்டுள்ளது. 1.4 பில்லியன் மக்கள், 28.5 வயதை சராசரி வயதாகக் கொண்ட இளமையான, அதிக இலட்சியங்களை கொண்ட மக்கள் தொகையை கொண்டிருப்பதால், உள்நாட்டு பொருளாதாரத்தின் தேவை உந்துதலும் மிகவும் வலுவாக உள்ளது.
சமூகப் பொருளாதாரம் குறித்த குறைந்தபட்ச ஒப்பந்தங்களை எங்கள் மக்கள் விரும்ப மாட்டார்கள் என்றும், இந்திய அரசு நீண்ட காலப் பார்வையிலேயே முடிவெடுக்கும் என்றும் அமைச்சர் பியூஷ் கோயல் குறிப்பிட்டார்.
வர்த்தக ஒப்பந்தங்களை பற்றிப் பேசும்போது, அது வெறுமனே வரிகள் மற்றும் சந்தை அணுகல் பற்றியது மட்டுமல்ல என்று அவர் வலியுறுத்தினார். வர்த்தக ஒப்பந்தங்கள் என்பது ஒரு நீண்ட கால சூழலில் நம்பிக்கை மற்றும் உறவுகள் பற்றியது. அது இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் செய்வதற்கான, வணிகங்களை பாதுகாப்பதற்கான மற்றும் ஜனநாயகத்தின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு சமமான வாய்ப்புகளை வழங்குவதற்கான ஒரு அடையாளம் ஆகும்.
இந்தியா ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, ஐரோப்பியாவின் நான்கு நாடுகள் அடங்கிய ஈ.எஃப்.டி.ஏ கூட்டமைப்புடன் வெற்றிகரமாக ஒப்பந்தங்களை முடித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய இராச்சியத்துடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நியாயமான, சமமான மற்றும் சமநிலையான ஒப்பந்தம் கிடைத்தால் மட்டுமே இந்தியா அதில் கையெழுத்திடும் என்ற இந்தியாவின் நிலைப்பாட்டை இந்த விளக்கங்கள் உறுதிப்படுத்துகின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
