ஜெர்மனியின் பொருளாதாரம் கடுமையான நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், அது அமெரிக்க டாலரை தவிர்த்துவிட்டு சீனாவுடன் புதிய கூட்டாளியாக மாறக்கூடும் என்ற ஊகங்கள் உலக சந்தைகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜெர்மனியின் பொருளாதார மந்தநிலை: ஜெர்மனி தொடர்ந்து இரண்டாவது முறையாக மந்தநிலையை சந்தித்து வருகிறது. கோவிட்-19க்கு முந்தைய பொருளாதார வளர்ச்சி நிலையை எட்டாத ஒரே ஜி7 நாடு ஜெர்மனி மட்டுமே.
தொழில்துறை சரிவு: குறிப்பாக, அந்நாட்டின் வாகன துறையில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதிக எரிசக்தி செலவுகள், தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் கடுமையான ஒழுங்குமுறை சிக்கல்கள் போன்றவை இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன.
அமெரிக்காவின் புதிய வர்த்தக வரிகள்: அமெரிக்க அரசு விதித்த புதிய 15% வர்த்தக வரி, ஜெர்மனியின் பொருளாதார சிக்கலை மேலும் ஆழப்படுத்தியுள்ளது.
சீனாவுடனான வர்த்தக உறவு:
இந்த நெருக்கடியால், ஜெர்மனி தனது கூட்டணி நாடுகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டின் முதல் பாதியில் ஜெர்மனியின் சீனாவுடனான வர்த்தகம் 122.8 பில்லியன் யூரோக்களை எட்டியுள்ளது. இது அமெரிக்காவுடனான வர்த்தகத்திற்கு கிட்டத்தட்ட சமமாக உள்ளது. ஆனால், சீனாவுக்கான ஏற்றுமதி குறைந்து, இறக்குமதி அதிகரித்துள்ளதால், ஜெர்மனிக்கு வர்த்தக பற்றாக்குறை அதிகரித்துள்ளது.
சீன யுவானுக்கு ஆதரவு:
இந்த நிலையில் திடீர் திருப்பமாக ஜெர்மனி இப்போது டாலரிலிருந்து விலகி, யூரோ கையிருப்புகளை அதிகரித்தும், சீன கரன்சியான யுவானை ஒரு மாற்றாக கருதியும் வருகிறது. முன்னணி ஜெர்மானிய கார் தயாரிப்பு நிறுவனங்கள், தங்கள் உற்பத்தியின் ஒரு பகுதியை சீனாவுக்கு மாற்றவும் பரிசீலித்து வருவதாக தெரிகிறது. ஜெர்மானிய எரிசக்தி வர்த்தகர்கள், நீண்டகால டாலர் ஒப்பந்தங்களை விட்டுவிட்டு, சீன நாணயத்தில் வர்த்தகம் செய்ய தொடங்கியுள்ளனர். ஜெர்மனியின் இரசாயன பொருட்களுக்கான பரிவர்த்தனைகள் முதல் முறையாக யுவானில் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உலகப் பொருளாதாரத்தில் தாக்கம்:
ஜெர்மனியின் இந்த நிலைப்பாடு அதன் ஐரோப்பிய கூட்டாளிகளான போலந்து மற்றும் பால்டிக் நாடுகளுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்த தொழில்துறையையும் காப்பாற்ற சீனாவுடன் இணைந்து செயல்படுவதை தவிர வேறு வழியில்லை என்று ஜெர்மனி கருதுகிறது. ஜெர்மனி, ஜி7 தளங்களிலிருந்து விலகி, யுவானை பயன்படுத்த முடிவு செய்தால், அது மேற்கத்திய நாடுகளின் ஏகபோக ஆதிக்கம் முடிவுக்கு வருவதை காட்டுவதாக உலக அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
