தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், கரூர் கூட்ட நெரிசல் விபத்து தொடர்பாக டெல்லியில் சிபிஐ அதிகாரிகளால் இரண்டாவது நாளாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த விசாரணை, தவெக தரப்பால் கோரப்பட்ட சிபிஐ விசாரணை என்றாலும், அதன் பின்னணியில் அரசியல் அழுத்தங்கள் இருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. குறிப்பாக, 2026 சட்டமன்ற தேர்தலை ஒட்டி விஜய்யின் அரசியல் நகர்வுகளை முடக்க பாஜக சிபிஐயை ஒரு கருவியாக பயன்படுத்துகிறதா என்ற கேள்வி வலுத்துள்ளது. இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் நடைபெறும் இந்த விசாரணையில், விஜய்யை ஒரு சாட்சியாக மட்டுமே சிபிஐ அணுகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விசாரணையின் போது விஜய்யிடம் கேட்கப்பட்டதாக கூறப்படும் கிடுக்குப்பிடி கேள்விகள் குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன. பேரணிக்கு ஏன் தாமதமாக வந்தீர்கள், காவல்துறை எச்சரிக்கைகளை மீறினீர்களா, விபத்து நடந்த பின்பும் பிரச்சாரத்தை தொடர்ந்தது ஏன் போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டதாக தெரிகிறது. ஆனால், சிபிஐ விசாரணை முடிந்து விஜய் வெளியே வருவதற்கு முன்னரே இத்தகைய ‘பிரேக்கிங்’ செய்திகள் ஊடகங்களில் வெளியானது, இது திட்டமிட்ட ஒரு பிம்ப கட்டமைப்போ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. விஜயை பலவீனமானவராகவும், பாஜகவை ஒரு அச்சுறுத்தும் சக்தியாகவும் காட்ட முயலும் சில ஊடகங்களின் போக்கு, அரசியல் உள்நோக்கம் கொண்டதாகவே பார்க்கப்படுகிறது.
சிபிஐ விசாரணையில் என்ன நடந்தது என்பதை விஜய் வெளியே கூறாதது, பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்காதது ஆகியவை காசுக்காக கூவும் நடுநிலையாளர்கள் என்ற போர்வையில் இருக்கும் நிலைய வித்வான்களுக்கு ரொம்பவே வசதியாகிவிட்டது. அவர்கள் இஷ்டத்திற்கு அடித்து விடுகிறார்கள்.
அரசியல் ரீதியாகப் பார்த்தால், பாஜக மற்றும் தவெக ஆகிய இருவருக்குமே பொதுவான எதிரி திமுக தான். சிபிஐ விசாரணையை வைத்து விஜய்யை பாஜக மிரட்டுகிறது என்ற பிம்பத்தை திமுக தரப்பு உருவாக்க முயன்றாலும், தவெக தரப்பில் சி.டி. நிர்மல்குமார் போன்றவர்கள் அதனை முறியடித்து வருகின்றனர். கரூர் விபத்திற்கு செந்தில் பாலாஜி தான் காரணம் என்று பாஜகவே குற்றம் சாட்டியிருக்கும் நிலையில், அந்த பழியை விஜய் மீது சுமத்த முடியாது என்பது அவர்களின் வாதம்.
இறுதியாக, விஜய் தனது அடுத்தகட்ட அரசியல் பயணத்தை தெளிவான திட்டமிடலுடன் தொடங்க வேண்டியது அவசியமாகும். சிபிஐ விசாரணை ஒரு சாட்சியாக முடிவடைந்தாலும், இறுதி அறிக்கையில் தவெகவின் நிர்வாக குளறுபடிகள் குறித்து கருத்துகள் இடம்பெற வாய்ப்புள்ளது. இதனை எதிர்கொள்ளும் துணிச்சலுடன், மாவட்ட வாரியாக பொதுக்கூட்டங்களை நடத்தி தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டும். ஜெயலலிதா போன்ற தலைவர்கள் எத்தனையோ சட்ட போராட்டங்களுக்கு மத்தியிலும் தனது அரசியலை தொய்வின்றி நடத்தினார்கள். அதேபோன்ற ஒரு தீவிரமான அணுகுமுறையை விஜய் கடைப்பிடித்தால் மட்டுமே, 2026ல் அவர் நினைத்த மாற்றத்தை கொண்டுவர முடியும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
