வாங்க ஒண்ணு சேர்வோம், உங்களால தனியா திமுகவை சமாளிக்க முடியாது.. வலிய வந்து ஆதரவுக்கரம் கொடுக்கும் பாஜக.. விஜய்க்கு ஆதரவாக பேசிய அண்ணாமலை.. கைகொடுக்க தயாராக இருக்கும் எடப்பாடியார்.. விஜய் எடுக்க போகும் முடிவு என்ன?

அரசியல் களத்தில் தனியாக பயணிக்க தொடங்கி இருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், கரூர் விபத்திற்கு பிறகு பல தரப்பிலிருந்தும் எதிர்பாராத ஆதரவுகளை பெற்று வருகிறார். குறிப்பாக, பாஜக மற்றும் அதிமுக போன்ற…

vijay eps annamalai

அரசியல் களத்தில் தனியாக பயணிக்க தொடங்கி இருக்கும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், கரூர் விபத்திற்கு பிறகு பல தரப்பிலிருந்தும் எதிர்பாராத ஆதரவுகளை பெற்று வருகிறார். குறிப்பாக, பாஜக மற்றும் அதிமுக போன்ற வலுவான கட்சிகள், விஜய்க்கு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் ஆதரவுக்கரம் நீட்டுவது, தமிழக அரசியலில் புதிய கூட்டணி சமன்பாடுகளை ஏற்படுத்தக்கூடும் என்ற யூகங்களை உருவாக்கியுள்ளது.

கரூர் சம்பவத்திற்கு பிறகு, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விஜய்க்கு ஆதரவாக பேசியது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது. அவர் விஜய் செய்த சில தவறுகளை சுட்டிக்காட்டி அறிவுரை வழங்கியபோதிலும், விஜய்யின் அரசியல் பயணத்தை தடுப்பதற்காக திமுக அரசு திட்டமிட்ட சதியை அரங்கேற்றியுள்ளதாக நேரடியாகவே குற்றம் சாட்டினார். மேலும், ஒரு தனிநபர் அரசியல் செய்ய வருவது ஜனநாயகத்திற்கு முக்கியமானது. அதைத் தடுப்பது நியாயமற்றது” என்றும் அவர் கூறினார்.

பாஜகவின் இந்த ஆதரவு, ஒரு அரசியல் வியூகமாகவே பார்க்கப்படுகிறது. மத்தியில் ஆளும் கட்சியாக பாஜக, தமிழகத்தில் கால் பதிக்க பல்வேறு வழிகளை தேடி வருகிறது. திராவிட கட்சிகளுக்கு எதிராக ஒரு வலுவான மாற்று சக்தியை உருவாக்க அது முயல்கிறது. இந்த சூழ்நிலையில், விஜய்யின் வருகை பாஜகவுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக தெரிகிறது.

“வாருங்கள், ஒன்று சேர்வோம். உங்களால் தனியாக திமுகவை சமாளிக்க முடியாது” என்ற மறைமுக அழைப்பை பாஜக, விஜய்க்கு விடுத்துள்ளது. இது, விஜய்யை தங்கள் பக்கம் இழுப்பதன் மூலம், தமிழகத்தில் தங்களது அரசியல் அடித்தளத்தை வலுப்படுத்த பாஜக முயல்வதாக காட்டுகிறது. பாஜக ஆதரவு முழுமையாக இருந்தால் திமுகவின் நெருக்கடியை தவெக எளிதில் சமாளிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

அதேபோல, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், ’தொலைக்காட்சியில் பார்க்கும்போது பாதுகாப்பு குறைபாடு இருப்பது தெளிவாக தெரிகிறது. பிரசார கூட்டத்திலும் போதிய பாதுகாப்பு இல்லை என்பது தெரிகிறது. இதை எல்லாம் நான் தொலைக்காட்சியில் பார்த்ததை கூறுகிறேன். இவ்வளவு வேகமாக ஒரு நபர் கமிஷன் அமைத்ததன் பின்னணி என்ன என்பது தெரியவில்லை? என்று விஜய்க்கு ஆதரவாக தெரிவித்துள்ளார்.

எடப்பாடியார், எதிர்காலத்தில் விஜய்யுடன் ஒரு கூட்டணியை அமைக்கத் தயாராக இருக்கிறார் என்ற செய்தியை இது உணர்த்துகிறது. தனித்து போட்டியிட்டால் வெற்றி பெறுவது கடினம் என்பதை உணர்ந்த அதிமுக, விஜய்யின் மக்கள் செல்வாக்கை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறது. மேலும், விஜய்யின் ஆதரவுடன் ஒரு வலுவான கூட்டணி அமைத்து, திமுகவை வீழ்த்த முடியும் என்று அதிமுக நம்புகிறது.

பாஜக மற்றும் அதிமுகவின் இந்த ஆதரவுகள், விஜய்யை ஒரு முக்கியமான முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளியுள்ளன. அவர் தனியாக அரசியல் பயணத்தை தொடருவாரா அல்லது இந்த இரண்டு கட்சிகளில் ஒன்றுடன் கூட்டணி அமைத்துக்கொள்வாரா?

விஜய், “நான் தனியாகவே அரசியல் செய்வேன்” என்ற கொள்கையில் உறுதியாக இருந்தால், அவர் இந்த ஆதரவுகளை புறக்கணிப்பார். இது, அவரது தொண்டர்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கும். ஆனால், திமுக போன்ற பெரிய கட்சிகளை தனியாக எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

பாஜகவுடன் கூட்டணி அமைப்பது விஜய்க்கு தேசிய அளவில் ஒரு பெரிய ஆதரவை பெற்றுத்தரும். ஆனால், பாஜகவின் சித்தாந்தம் மற்றும் இந்துத்துவ கொள்கைகள், விஜய்யின் ஆதரவு தளத்தில் உள்ள சிறுபான்மையினர் மற்றும் மதச்சார்பற்ற வாக்காளர்களைப் பிரிக்கும் ஆபத்து உள்ளது. மேலும் பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என்பதை அவர் ஏற்கனவே பலமுறை கூறிவிட்டார். இந்த நிலையில் பாஜக கூட்டணியில் சேர்ந்தால் அவரது நம்பகத்தன்மைக்கு ஆபத்து ஏற்படும்.

திமுகவுடன் கூட்டணி அமைப்பது, விஜய்க்கு தமிழகத்தில் ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்துக்கொடுக்கும். அதிமுகவின் வாக்கு வங்கி, விஜய்யின் மக்கள் செல்வாக்குடன் இணைந்தால், திமுகவுக்கு ஒரு பெரிய சவாலை உருவாக்க முடியும். ஆனால், இது விஜய்யை, பெரிய அரசியல் கட்சிகளின் பின்னால் இயங்கும் ஒரு தலைவராக காட்டிவிடும் என்ற அச்சமும் உள்ளது.

கரூர் சம்பவம், விஜய்க்கு ஒரு சோதனையான நேரம் என்றாலும், அதுவே அவருக்கு ஒரு அரசியல் வாய்ப்பையும் உருவாக்கியுள்ளது. பாஜக மற்றும் அதிமுகவின் ஆதரவுக் கரங்கள் நீட்டப்பட்ட நிலையில், அவர் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டியது அவசியம். இந்த முடிவு, அவரது அரசியல் எதிர்காலத்தை மட்டுமல்ல, தமிழகத்தின் அரசியல் நிலவரத்தையே மாற்றி எழுதக்கூடிய ஒன்றாக இருக்கும்.