தமிழக அரசியலில் 2026 சட்டமன்ற தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, தமிழக பாஜகவின் முகமாக பார்க்கப்பட்ட அண்ணாமலை, நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடவில்லை என்ற அறிவிப்பு அரசியல் வட்டாரங்களில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. “தமிழ்நாடு தேறாது, உங்களது உழைப்பை இங்கே வீணாக்க வேண்டாம், டெல்லிக்கு வந்துவிடுங்கள்” என்று பிரதமர் மோடியே அண்ணாமலைக்கு அழைப்பு விடுத்ததாக எழுந்துள்ள தகவல்கள், தமிழகத்தில் பாஜகவின் வியூகம் தோல்வியடைந்துவிட்டதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. ஒரு காலத்தில் “என் மண் என் மக்கள்” என்று தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்ட அண்ணாமலை, இப்போது வேட்பாளர் பட்டியலில் இடம் பெறாதது அவரது ஆதரவாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என்ற செய்திகள் ஒருபுறம் உலவினாலும், அவர் தேர்தலுக்கு பிந்தைய சூழலில் டெல்லி அரசியலில் ஒரு முக்கிய பங்கு வகிக்கப்போகிறார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி மீண்டும் மலர்ந்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமியின் நிபந்தனைகளுக்கு பணிந்து பாஜக தலைமை அண்ணாமலையை ஓரம் கட்டிவிட்டதோ என்ற சந்தேகமும் எழுகிறது. கோயம்புத்தூர் போன்ற தங்களின் கோட்டையிலேயே அதிமுகவிடம் தொகுதிகளை விட்டுக்கொடுத்தது, அமித்ஷா போன்ற தலைவர்கள் தமிழகத்தின் யதார்த்த நிலையை தாமதமாக புரிந்து கொண்டதையே காட்டுகிறது. திராவிட கட்சிகளின் பிடியில் இருக்கும் தமிழகத்தில், தேசிய கட்சிகள் தன்னிச்சையாக வளருவது கடினம் என்பதை பாஜக தலைமை இப்போது உணர்ந்திருக்கலாம்.
தமிழக அரசியலை பொறுத்தவரை, இன்று களத்தில் இருப்பவை அதிமுக, திமுக மற்றும் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் ஆகிய மூன்று துருவங்கள் மட்டுமே. பாஜகவோ அல்லது காங்கிரஸோ திராவிட கட்சிகளின் முதுகில் ஏறி சவாரி செய்யாமல் இங்கே ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறுவது சாத்தியமில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியுள்ளது. 27 தொகுதிகளில் மட்டும் போட்டியிடும் பாஜக, அதிமுகவின் தயவிலேயே தனது இருப்பை தக்கவைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது அண்ணாமலை போன்ற ஒரு துடிப்பான தலைவருக்கு தமிழக அரசியலில் ஏற்பட்ட ஒரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
அமித்ஷாவின் “மிஷன் தமிழ்நாடு” திட்டம் எதிர்பார்த்த பலனை தராததால், அண்ணாமலையை டெல்லிக்கு அழைத்து அவருக்கு ஒரு கௌரவமான பதவியை அளிப்பதன் மூலம், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள இந்த சங்கடத்தை தவிர்க்க மோடி அரசு முயல்கிறது. திராவிட மண்ணில் ஒரு மாற்றத்தை கொண்டு வருவேன் என்று முழங்கிய அண்ணாமலை, இப்போது களத்தில் நிற்காமல் பிரச்சார பீரங்கியாக மட்டுமே செயல்பட போவது, தமிழக அரசியலில் பாஜகவின் பலவீனத்தையே பறைசாற்றுகிறது. இறுதியில், தமிழகம் எப்போதும் போல திராவிட மற்றும் தமிழ் தேசிய அரசியலை நோக்கியே நகர்கிறது என்பதில் மாற்றமில்லை.
எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதமும், ஸ்டாலினின் திராவிட மாடல் 2.0 வியூகமும், விஜய்யின் புதிய வரவும் தேசிய கட்சிகளின் இடத்தை முற்றிலுமாக முடக்கிவிட்டன. அண்ணாமலை டெல்லிக்கு செல்வது என்பது அவரது தனிப்பட்ட அரசியல் வளர்ச்சிக்கு உதவலாமே தவிர, தமிழகத்தில் பாஜக இன்னொரு சக்தியாக உருவெடுக்கும் கனவுக்கு வைக்கப்பட்ட முற்றுப்புள்ளியாகவே பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
