மதுவிலக்கு கொள்கை என்பது வெறும் பேசுபொருள் தானா? நடிகர் சூர்யா பரபரப்பு அறிக்கை

By John A

Published:

தற்போது தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், பேச்சு பொருளாகவும் திகழ்ந்து வரும் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய பலி நிகழ்விற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மதுவிலக்கு என்ன ஆனது என்று ஆளுங்கட்சிக்கு அழுத்தம் தரத் தொடங்கியிருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் சூர்யா பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மதுவிலக்குக் கொள்கை வெறும் பேசுபொருள்தானா என்று சற்று காட்டமாகவே தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார். நடிகர் சூர்யா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ஒரு சிறிய ஊரில்‌ 50 மரணங்கள்‌ அடுத்தடுத்து நிகழ்வது, புயல்‌, மழை, வெள்ளம்‌ போன்ற பேரிடர்‌ காலத்தில் கூட நடக்காத துயரம்‌. நூற்றுக்கும்‌ மேற்பட்டவர்கள்‌ இன்னும்‌ தொடர்ந்து மருத்துவமனையில்‌ இருக்கிறார்கள்‌ எனும்‌ தகவல்‌ அச்சமூட்டுகிறது. அடுத்தடுத்து நிகழும்‌ மரணங்களும்‌, பாதிக்கப்பட்டவர்களின்‌ அழுகுரலும்‌ மனதை நடுங்கச்‌ செய்‌கிறது.

விஷச்சாரயத்திற்கு அன்பிற்குரியவர்களைப்‌ பலிகொடுத்துவிட்டு அழுது துடிப்பவர்களுக்கு எத்தகைய வார்த்தைகளில்‌ ஆறுதல்‌ சொல்லிவிடமுடியும்‌? தற்போது அரியல்‌ கட்சிகள்‌, இயக்கங்கள்‌, ஊடகங்கள்‌, மக்கள்‌ என அனைத்து தரப்பினரின்‌ கவனமும்‌, கவலையும்‌, கோபமும்‌ அதிகரித்திருக்‌கிறது. அரசும்‌, ஆட்‌சி நிர்வாகமும்‌ விரைந்து செயல்பட்டு, இழப்பைக்‌ குறைக்க போராடிக்‌ கொண்டிருப்பது ஆறுதல்‌ அளிக்கிறது. ஆனால்‌ நீண்ட கால பிரச்சனைக்கு குறுகிய கால தீர்வு என்கிற இந்த வழக்கமான அணுகுமுறை நிச்சயம்‌ பலனளிக்காது.

கடந்த ஆண்டு இதேபோல விழுப்புரம்‌ மாவட்டத்தில்‌ மெத்தனால்‌ கலந்த விஷச்சாரயத்தை குடித்து 22 பேர்‌ பலியானர்கள்‌. அரசு தீவிர நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தது. இப்போது பக்கத்து மாவட்டத்தில்‌ அதே மெத்தனால்‌ கலந்த விஷச்சாராயம்‌ குடித்து கொத்து கொத்தாக மக்கள்‌ இறந்திருக்‌கிறார்கள்‌ இப்போதுவரை எந்த மாற்றமும்‌ நிகழவில்லை என்பது மிகவும்‌ வருத்தம்‌ அளிக்கிறது.

வாழ்வை மேம்படுத்துவார்கள்‌ என நம்பி வாக்களிக்கும்‌ தமிழ்நாட்டு மக்களை, கடந்த இருபது ஆண்டுகளுக்கும்‌ மேலாக மாறி மாறி நம்மை ஆட்சி புரிந்த அரசாங்கங்களே டாஸ்மாக்‌ வைத்து மக்களை குடிக்க வைக்கற அவலத்தை தொடர்ந்து பார்த்துக் கொண்டுதான்‌ இருக்‌கிறோம்‌. ‘மதுவிலக்கு கொள்கை’ என்பது எல்லா அரசியல்‌ கட்சிகளுக்கும்‌ தேர்தல்‌ நேரத்து பேசுபொருளாக மட்டுமே முடிந்து விடுகிறது.

டாஸ்மாக்‌கில்‌ 150 ரூபாய்க்கு குடித்து போதைக்கு அடிமையானவர்கள்‌ பணம்‌ இல்லாதபோது 50 ரூபாய்க்கு இடைக்கும்‌ விஷச்சாரயத்தை வாங்கிக்‌ குடிக்கிறார்கள்‌. குடிக்கு அடிமையானவர்களின்‌ பிரச்சனை என்பது தனிநபர்‌ பிரச்சனை அல்ல, அந்த ஒவ்வொரு குடும்பத்தின்‌, ஓட்டு மொத்த சமூகத்தின்‌ பிரச்சனை என்பதை எப்போது நாம்‌ அனைவரும்‌ உணரப்போகிறோம்‌?

அரசாங்கங்களே குடிப்பழக்கத்தை ஊக்கப்படுத்தி சொந்த மக்கள்‌ மீது பல ஆண்டுகளாக நடத்திவரும்‌ வன்முறையை உடனடியாக நிறுத்தவேண்டும்‌. குடிப்பழக்கத்திற்கு ஆளானவர்களை மீட்க மாவட்டம்‌ தோறும்‌ மறுவாழ்வு மையங்களைத்‌ தொடங்‌கி அவர்களை குடிநோயிலிருந்து மீட்க வேண்டும்‌. மாணவர்கள்‌ கல்வியில்‌ முன்னேற அரசு எத்தகைய தொலைநோக்கு செயல்‌ திட்டங்களை நடைமுறைப்‌ படுத்துகிறதோ, அதேபோல குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின்‌ மறுவாழ்விற்கு முன்னுதாரணமான திட்டங்களை வகுத்து ஓர்‌ இயக்கமாகவே செயல்படுத்த வேண்டும்‌.

அரசும்‌, அரசியல்‌ கட்சிகளும்‌ தொலைநோக்கு பார்வையுடன்‌ செயல்பட்டால்‌ மட்டுமே இனி எதிர்காலத்தில்‌ இதுபோன்ற அவல மரணங்களைத்‌ தடுக்கமுடியும்‌. குறுகிய கால தீர்வை கடந்து மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர்‌ அவர்கள்‌ மதுவிலக்குக்‌ கொள்கையில்‌ மக்கள்‌ நலன்‌ சார்ந்த முடிவுகளை எடுப்பார்‌ என மக்களோடு சேர்ந்து நானும்‌ நம்பிக்கையுடன்‌ எதிர்பார்க்‌கிறேன்‌.

சட்ட விரோதமாக விற்பனை செய்யப்படும்‌ விஷச்சாரயத்தைத்‌ தடுக்கத்‌ தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும்‌ கண்டனம்‌. இறந்த உயிர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்‌. மருத்துவமனையில்‌ இருப்பவர்கள்‌ மீண்டு வர பிராத்தனை.
இனி ஒரு விதி செய்வோம்‌..! அதை எந்நாளும்‌ காப்போம்‌.!!”

இவ்வாறு சூர்யா தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.