அந்த அளவுக்கு பாசமா.. 12 வருஷம் ஒரே ஸ்கூலில் வேலை செஞ்சுட்டு டிரான்ஸ்பரில் போன ஆசிரியர்.. மாணவ மாணவிகள் செஞ்ச விஷயம்…

By Ajith V

Published:

பொதுவாக ஒருவரது பள்ளிக்கூட காலத்தில் அவர்களுக்கு ஆசிரியர்கள் என்றாலே ஒரு வித தயக்கம் எப்போதுமே இருந்து கொண்டே தான் இருக்கும். கல்லூரி பருவம் வந்தால் கூட ஒரு முதிர்ச்சி வந்து விடுவதுடன் மட்டுமில்லாமல் பெரிதாக பேராசிரியர்களை நினைத்து யாருமே அந்த அளவுக்கு பயப்படவும் மாட்டோம்.

ஆனால் அதே வேளையில் பள்ளி பருவம் என்றால் ஆசிரியர்களை தூரத்தில் பார்த்தாலே ஒருவித நடுக்கமும், பயமும் மனசுக்குள் வந்துவிடும். அந்த அளவுக்கு பள்ளி ஆசிரியர்கள் என்றாலே என்றைக்குமே ஒரு பயமும், ஒரு நடுக்கமாகவே இருந்து வரும் நிலையில் சமீபத்தில் ஒரு பள்ளி ஆசிரியருக்கான மற்ற மாணவர்கள் செய்த விஷயம் தற்போது பலரையும் நெகிழ வைத்துள்ளது.

தெலுங்கானா மாநிலம், பொனக்கல் என்னும் பகுதியில் அரசு பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இங்கே ஸ்ரீனிவாஸ் என்ற ஆசிரியர் ஒருவர், கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் மாணவர்களிடம் மிக அன்பாக இருந்ததுடன் மட்டுமில்லாமல், படித்தவர்கள் படிக்காதவர்கள் என அனைவரையுமே சரிசமமாக நடத்தி தனித்தனியாக கூட படிப்பில் முன்னேற வேண்டும் என கனிவாக கவனித்து வந்துள்ளார்.

அப்படி இருக்கையில், தற்போது 40 வயதாகும் ஸ்ரீனிவாஸ், 12 ஆண்டுகள் அந்த பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்த சமயத்தில் தான், அவருக்கு பணியிடமாற்றம் கிடைத்துள்ளது. பொனக்கல் பள்ளியில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அக்கேபள்ளிக்குடா என்னும் இடத்தில் அமைந்துள்ள அரசு பள்ளியில் தான் அவருக்கு புதிதாக இடமாற்றம் கிடைத்துள்ளது.

ஸ்ரீனிவாஸ் போல ஒரு ஆசிரியர் கிடைப்பதே பெரும் பாக்கியம் என்ற சூழலில், அவர் வேறு பள்ளிக்கு மாறியது அவர் கல்வி பயின்று கொடுத்த மாணவ மாணவிகள் மத்தியில் கடும் வேதனையை ஏற்படுத்தி இருந்தது. அப்படி ஒரு சூழலில், பொன்னக்கல் பள்ளியில் படித்து வந்த 250 மாணவர்களில் சுமார் நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஸ்ரீனிவாஸ் புதிதாக இடமாற்றம் செய்த பள்ளியில் தங்களை சேர்க்கும் படி பெற்றோர்களை வற்புறுத்தி உள்ளனர்.

இதனால், அவர்கள் அனைவரையும் அக்கேபள்ளிக்குடா பகுதியில் உள்ள பள்ளியிலும் அவர்கள் மாற்றி உள்ளனர். முன்பு இந்த பள்ளியில் மாணவ மாணவிகள் எண்ணிக்கை மிக குறைவாக இருக்க, ஆசிரியர் ஸ்ரீனிவாஸ் வருகைக்கு பின் அப்படியே இரு மடங்காக மாறி உள்ளது. ஒரு காலத்தில் ஆசிரியர்கள் என்றாலே ஒதுங்கி நடந்த காலம் போய், இன்று அவர்களின் அன்பிற்கு இலக்கணமாக நடந்துள்ள இந்த சம்பவம், பலரையும் நெகிழ தான் வைத்துள்ளது.

மேலும் உங்களுக்காக...