இந்த ஆரம்பிச்சுட்டாருல சந்திரபாபு நாயுடு.. நிர்மலா சீதாராமனை நேரில் போய் சந்தித்து வைத்த கோரிக்கை

By Keerthana

Published:

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி தொடர வேண்டும் என்றால், அதற்கு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவும், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் ஆதரவும் கண்டிப்பாக தேவை. அவர்களின் ஆதரவுடனே மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது.

முதல் இரண்டு முறை பாஜக தனியாகவே மெஜாரிட்டியுடன் வெல்ல முடிந்த பாஜகவால் இந்த முறை முழு மெஜாரிட்டியுடன் வெல்ல முடியவில்லை… கூட்டணி பலத்தில் தான் ஆட்சியில் தொடர்கிறது.

பாஜக கூட்டணிக்கு ஆதரவு தந்துள்ள பீகாரின் நிதீஷ்குமாரும் சரி, ஆந்திராவின் சந்திரபாபு நாயுடுவும் சரி, இருவருமே காரணம் இல்லாமல் பாஜகவை ஆதரிக்கவில்லை.. பாஜகவை ஆதரிக்க காரணம்.. தங்கள் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து தர வேண்டும் என்பது தான். ஆனால் பீகார் மற்றும் ஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து கோரிக்கையை கடந்த 10 வருடத்தில் ஒருமுறை கூட செவிக்கூட பாஜக அரசு சாய்த்தது இல்லை..

ஏனெனில் பீகார் மற்றும் ஆந்திரா மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கினால் மற்ற மாநிலங்களும் கேட்கும் என்பதுதான். இப்போதைய நிலையில் மலைப்பகுதி மாநிலங்கள், வறுமையில் உள்ள மாநிலங்கள், மக்கள் அடர்த்தி குறைவான மாநிலங்களுக்கு மட்டும் தான் சிறப்பு அந்தஸ்து தரப்படுகிறது. அந்த வகையில் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் போன்ற மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து தரப்பட்டுள்ளது.

இந்த மாநிலங்கள் மலைகளில் உள்ள மாநிலங்கள் மட்டுமல்ல வறுமையில் உள்ள மாநிலங்கள்.. இந்த மாநிலங்களுக்கு மத்திய அரசு தரும் நிதிதான் ஜீவாதாரம். அவர்களுக்கு போதிய நிதி மாநிலத்தில் இருந்து கிடைக்காத நிலை உள்ளது. இதனால் தான் சிறப்பு அந்தஸ்து தந்துள்ளது மத்திய அரசு. அதேநேரம் மற்றமாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து ஒருமுறை கூட பாஜகவோ, அதற்கு முன்பு இருந்த காங்கிரஸ் அரசுகளோ தந்தது இல்லை..

ஏனெனில் சிறப்பு அந்தஸ்து பீகார் மற்றும் ஆந்திரிவிற்கு தந்தால் மற்ற மாநிலங்கள் கேட்கும். அது பாம்பு புற்றுக்குள் கை விடுவதற்கு சமம்.. என்பதால் அதை அவ்வளவு எளிதாக பாஜக அரசு செய்ய வாய்ப்பு இல்லை.

இந்த சூழலில் ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, டெல்லியில் நேற்று முன்தினம் பிரதமர் மோடியை சந்தித்தார். நேற்று அவர் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசினார். அப்போது, ஆந்திராவின் நிதி தேவையையும், அதற்கான காரணங்களையும் விளக்கி விரிவான மனு அளித்தார்.

நிலுவையில் உள்ள திட்டங்களை விளக்கிய அவர், மத்திய அரசின் அவசர நிதி உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். கடன் சுமையால் பாதிக்கப்பட்ட ஆந்திராவுக்கு நிதி உதவியை அதிகரிக்குமாறு வேண்டுகோள் வைத்தார். இதை முழுமையாக கேட்டுக்கொண்ட நிர்மலா சீதாராமன், கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதி அளித்தார். சந்திப்பின்போது, தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர்கள் உடன் இருந்தனர்.